உ.பி: யோகி கட்டாயம் ஜெயிக்கனும்.... ஏன் தெரியுமா? விவசாயிகள் தலைவர் ராகேஷ் திகாயத் செம்ம நக்கல்!
நொய்டா: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் கட்டாயம் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவராக அமர வேண்டும் என்று விவசாயிகள் சங்கமான பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் கிண்டலடித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தல் பிப்ரவரி 10 முதல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதர மாநிலங்களைப் போல மார்ச் 10-ந் தேதி அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
எடப்பாடி போட்ட நச் கணக்கு.. வேற ரூட்டை எடுத்த பாஜக.. பொன்.ராதா என்ன இப்படி சொல்கிறார்.. சிக்கலாகுமா?
உ.பி.யில் ஆளும் பாஜகவுக்கு பல முனைகளிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 3 அமைச்சர்கள், எம்.எல்.ல்.ஏக்கள் என கொத்து கொத்தாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர். பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னா தள் எம்.எல்.ஏக்களும் அக்கட்சியில் இருந்து வெளியேறி சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர். இதேபோல் சமாஜ்வாதி, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
அகிலேஷுடன் சந்திப்பு
உத்தரப்பிரதேசத்தில் அடுத்தடுத்து நிகழும் திருப்பங்கள் களநிலவரத்தை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. தலித்துகளின் தலைவரான பீம் ஆர்மி சந்திரசேகர், அகிலேஷ் யாதவை சந்தித்து பேசினார். சமாஜ்வாதி கட்சியுடன் சந்திரசேகர் ஆசாத் கட்சி கூட்டணி அமைக்கலாம் என கூறப்பட்டு வருகிறது.
பாஜகவுக்கு எதிராக விவசாயிகள்
இந்நிலையில் டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்கமும் உ.பி. தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றன. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான கூட்டணியை விவசாயிகள் சங்கமான பாரதிய கிஷான் யூனியன் ஆதரிப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. பின்னர் இதனை அந்த அமைப்பு மறுத்திருந்தது.
ஜெயிச்சு எதிர்க்கட்சி தலைவராகட்டும்
தனிடையே பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத், உ.பி. தேர்தல் தொடர்பாக கூறியதாவது: உ.பி.யில் எந்த ஒரு அணியையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர் போட்டியிடும் கோரக்பூர் தொகுதியில் கட்டாயம் வெல்ல வேண்டும். ஏனெனில் அப்போதுதான் உ.பி.யில் வலிமையான எதிர்க்கட்சி அமையும். இவ்வாறு ராகேஷ் திகாயத் கூறினார்.
Recommended Video
களநிலவரத்தை மாற்றும் மேற்கு உ.பி.
மேற்கு உ.பி.யில் விவசாயிகள் போராட்டமானது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்றே கூறப்படுகிறது. மேற்கு உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கும் ஆர்.எல்.டி. தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்கின்றன கணிப்புகள். இதனால் மேற்கு உ.பி.யில் ஜாட், முஸ்லிம்களின் வாக்குகளை சமாஜ்வாதி கட்சி கூட்டணி அப்படியே அள்ளுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.