முடி வெட்ட முடியலையே.. தமிழனுக்கு கெட் அவுட்டு… இந்திக்காரனுக்கு கட் அவுட்டா..!
சென்னை: ஒரு காலத்தில வட மாநிலங்களுக்கு வேலைக்குப் போன தமிழர்களிடம் '' சீக்கிரமா ஹிந்தி கத்துக்கங்க. அப்பதான் அங்கு காலம் தள்ள முடியும்''- ணு பலரும் சொன்னதுண்டு. ஆனால் இப்ப என்னடான்னா தமிழ்நாட்டிலேயே ஹிந்தி தெரிஞ்சாத்தான் பிழைப்பை நடத்த முடியும் அப்படிங்கற நிலை உருவாகிக்கிட்டிருக்கு (உருவாக்கிட்டானுங்க).
பெரிய பெரிய ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் என எல்லா இடங்களிலும் 'கியா...ஜி''-ங்கற சத்தத்தை சர்வசாதாரணமா கேட்க முடியுது. திருப்பூர் உள்ளிட்ட சில இடங்களில் ஹிந்தி தெரிஞ்சவங்க வேலைக்குத் தேவைண்ணு போர்டே தொங்கவிட்டிருக்காங்க. நெல்லை மாவட்டம் நான்குனேரி (இடைத்தேர்தல் புகழ்!) ரயில்வே நிலையத்தில் அண்மையில் ஒருநாள் மாலையில் ஒரே சத்தம். என்ன, ஏது என விசாரித்தால், பயணி ஒருவர் குறிப்பிட்ட இடத்திற்கு டிக்கெட் கேட்க, நிலையத்தில் இருந்தவர் வேறு இடத்திற்கு டிக்கெட் கொடுத்துவிட்டார்.
விஷயம் தெரிந்த பயணி, உள்ளூர் தமிழில் ஓங்கிச் சத்தம் போட, டிக்கெட் கொடுத்தவர் ஹிந்தியில் எதையோ சொல்லிக் கொண்டிருந்தார். ஒருவர் சொன்னது மற்றவருக்கு சுத்தமாக விளங்காததால் ஏற்பட்ட வினை. நல்ல வேளையாக இந்தி தெரிஞ்ச உள்ளூர்காரர் ஒருத்தர் அந்த சமயத்தில் அங்கே வர, அவர் இருவரிடமும் பக்குவமாகப் பேசி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார். இன்றைக்குத் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நிலைமை இதுதான்.
குருப்புனல் கமல் மாதிரி
இன்னிக்கு தமிழகத்தின் பெரும்பாலான சலூன்களில் இந்திக்கார பசங்க பான்பராக்கை மென்றுகொண்டே "கியா கட்டிங் சாப்னு" கேட்கும் நிலைதான் இருக்கிறது. அவனுக்கு நாம சொல்றது எதுவும் புரியறதில்லை. அவன் வெட்டி முடித்து தலையை நம்மிடம் திருப்பித் தரும் போதுதான் நாம் குணா கமலா, குருதிப்புனல் கமலா என நமக்கே தெரிகிறது.
இந்திக்காரர்கள்
''நீங்க இல்லைண்ணா இந்திக்காரங்க இருக்கிறாங்க'' என்கிற எண்ணம், இடைத்தரகர்களிடமும் முதலாளிகளிடமும் ஆழமாக வேரூன்றிவிட்டது. அடித்தட்டு வேலைகளை மட்டும்தான் வட இந்தியர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள் என சொல்வதற்கில்லை. தமிழகத்தில் இயங்கும் மத்திய, மாநில அரசு அலுவலங்களிலும் அதிகளவில் அவர்கள் கால் ஊன்றத் தொடங்கிவிட்டார்கள். குறிப்பாக ரயில்வே துறையில் வட மாநிலத்தினரின் ஆக்கிரமிப்பு அதிகளவில் இருக்கு.
ரயில்வேயில் ஓவர்
சமீபத்தில் தெற்கு ரயில்வே, திருச்சி கோட்டத்தில் எலக்ட்ரிஷியன், ஃபிட்டர், மெக்கானிக், வெல்டர் உள்ளிட்ட தொழில் பழகுநர் இடங்களுக்கு 1,765 பேர் தேர்வு செய்யப்பட்டாங்க. கேட்டால் அதிர்ச்சியா இருக்கும்! தேர்வு செய்யப்பட்டவர்களில் 1,600 பேர் வட மாநிலத்தினர். இதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை ரயில்வே கோட்டத்தில் 512 பேருக்கு வேலை கொடுக்கப்பட்டது. இதில் 90 சதவீதம் பேர் ஹிந்திவாலாக்கள்.
என்எல்சியிலும் அதிகம்
ரயில்வே மட்டுமில்லீங்க.... என்.எல்.சி எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், பெல் எனப்படும் பாரத மிகுமின் நிறுவனம், பொதுத்துறை வங்கிகள், வருமான வரித்துறை, சுங்க இலாகா என அண்மைக்காலமாக தமிழகத்தில் அனைத்து மத்திய அரசு நிறுவனங்களிலும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம்தான் கொடிகட்டிப் பறக்குது.
நிர்மலாவே சொல்லிட்டாங்க
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில், ‘'ஒவ்வொரு அலுவலகத்திலும் உள்ளூர் மொழி தெரிந்த ஒருவர் இருந்தாலே போதுமானது'' என சொன்னது, இந்த விஷயத்தில் மத்திய அரசு கடைபிடித்துவரும் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. உள்ளூர் மொழி தெரிந்தவர், இதே மாதிரியான பஞ்சாயத்துக்களையே பார்த்துக்கொண்டிருந்தால் அவரது வேலையை யார் பார்ப்பது?
கனவுகளுடன் தமிழக இளைஞர்கள்
தமிழக இளைஞர்கள் பலர் மத்திய, மாநில அரசு வேலைக்கான தேர்வுகளை எழுதிவிட்டு, வெறும் கனவுடன் நாட்களை நகர்த்திக்கிட்டு இருக்கிறாங்க. ஆனால் டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், அரசுப் பணிகளுக்கான தேர்வில் அதிகளவில் வெற்றிபெற்று, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள அலுவலகங்களில், குறிப்பாக மத்திய அரசு அலுவலகங்களில் ஈசியா வேலையில உட்கார்ந்திடறாங்க. இது எப்படிச் சாத்தியம்? திட்டமிட்டு இது அரங்கேற்றப்படுகிறதா என பலரும் சந்தேகம் எழுப்புறாங்க. இதைத் தடுக்க என்ன செய்யலாம்?
முன்னுரிமை தேவை
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன வேலை வாய்ப்பில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். குஜராத், மத்தியப்பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இப்படி தனிச் சட்டமே இயற்றியுள்ளன. தமிழ்நாடு அரசும் அப்படி ஒரு சட்டம் இயற்றினால்தான் இந்த கொடுமைகளைத் தடுக்க முடியும் என பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் தமிழக அரசு அந்த மாதிரியான சட்டத்தை இயற்றாமல், தன் வசம் உள்ள வேலை வாய்ப்புகளையும் வெளி மாநிலத்தினருக்கு தானம் பண்ணும் வேலையை செஞ்சிகிட்டிருக்குது என்பதுதான் உண்மை.
சிவில் நீதிபதிகள்
சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான தமிழக அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில், விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லைண்ணு சொல்லப்பட்டிருந்தது. தமிழ் தெரிந்திருக்க அவசியமில்லை என்றால் ஹிந்திக்காரங்களை இதர் ஆவோன்னு சிவப்பு கம்பளம் விரிச்சு கூப்பிடுறதாகத்தானே அர்த்தம்! இதேபோல தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி, குரூப்-2 பாடத்திட்டத்தில் அதிரடி மாற்றம் செஞ்சிருக்குது. இதன்படி, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதல்நிலை தேர்வில் மொழித்தாள், அதாவது தமிழ் நீக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஹிந்திக்கு மறைமுகமா வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.
காத்திருப்பு அதிகரிப்பு
தமிழகத்தில் இன்றைய தேதிக்கு சுமார் 85 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளுக்காகக் காத்திருப்பதாக புள்ளிவிபரங்கள் சொல்லுகின்றன. இந்த நிலையில் இருக்கிற வேலைவாய்ப்புகளையும் வெளி மாநிலத்தினருக்கு தாரைவார்ப்பதை எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. யாதும் ஊரே; யாவரும் கேளீர் என்பதெல்லாம் சரிதான்! அதேசமயம் ‘தனக்கு மிஞ்சிதான் தானம்' என்பதையும் சம்மந்தப்பட்டவர்கள் நினைவில் கொள்வது மிகவும் அவசியம்.
- கௌதம்