பற்றி எரிந்த 3வது மாடி.. 3 வயது தம்பியைக் கீழே தூக்கிப் போட்டு விட்டு தானும் குதித்த 10 வயது அண்ணன்!
பிரான்ஸ் நாட்டில் தீ விபத்தில் சிக்கிய 3வது மாடியில் இருந்து குதித்த இரண்டு குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் தீ விபத்தில் இருந்து தப்பிக்க, மூன்றாவது மாடியில் இருந்து குதித்த இரண்டு சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சம்பவத்தன்று பிரான்ஸ் நாட்டில் உள்ள கிரெனோபிள் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. அந்த ஒரு வீட்டில் பத்து வயது சிறுவனும், மூன்று வயது நிரம்பிய அவனது தம்பியும் இருந்தனர்.
வீடு தீப்பிடித்து எரிவதைப் பார்த்து அதிர்ந்து போன அந்த சிறுவர்கள் அலறத் தொடங்கினர். வீட்டின் முன்பக்கக் கதவு பூட்டப்பட்டிருந்ததால் வெளியில் செல்ல முடியாமல் இருவரும் உள்ளே சிக்கிக் கொண்டனர். சிறுவர்கள் இருவரும் ஜன்னல் வழியாக சத்தம் போட்டு சாலையில் சென்றவர்களிடம் உதவி கோரினர்.
சிறுவர்கள்
அப்போது அந்த பக்கம் சென்றவர்கள் சிறுவர்கள் அலறுவதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இருவரையும் கீழே குதித்து விடுமாறு கூறினார். இதையடுத்து அந்த பத்து வயது சிறுவன் மூன்று வயதான தம்பியை முதலில் கீழே தூக்கிப் போட்டான். அந்த குழந்தையை கீழே இருந்தவர்கள் பிடித்துவிட்டனர்.
தப்பித்த சிறுவர்கள்
பின்னர் மேலே இருந்த சிறுவனும் கீழே குதித்தான். அவனை பிடிக்கும் போது ஒருவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. நல்லவேளையாக அந்த சிறுவர்கள் இருவருக்கு எதுவும் ஆகவில்லை. தீப்பிடித்த வீட்டில் புகையில் சிக்கியதால் இருவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணை
தீயணைப்பு வீரர்கள் அந்த வீட்டில் எரிந்துகொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர். 3வது மாடியில் உள்ள வீட்டில் தீப்பிடித்தது எப்படி? அந்த வீட்டில் இரண்டு குழந்தைகள் மட்டும் தனியாக இருந்தது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
துணிச்சலுக்கு பாராட்டு
ஆனால் தீப்பிடித்த வீட்டில் இருந்து எப்படியும் தப்பித்தே ஆக வேண்டும் என போராடி, துணிச்சலாக மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்த அந்த சிறுவர்களின் துணிச்சலையும், அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படாமல் சரியாக கீழே இருந்து பிடித்தவர்களையும் அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.