திருப்பம்.. சீனாவிற்கு முன்பே பிரான்சில் கொரோனா வைரஸ் தாக்கிவிட்டதா?.. வெளியான ஆராய்ச்சி முடிவு!
கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றுவதற்கு முன்பாகவே பிரான்சில் சிலரை தாக்கி இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பாரிஸ்: கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றுவதற்கு முன்பாகவே பிரான்சில் சிலரை தாக்கி இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செய்யப்பட்ட ஆராய்ச்சி ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்க 180 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 35 லட்சம் பேர் இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சீனாவில் முதல் நபருக்கு வுஹனில் கடந்த வருடம் டிசம்பர் 8ம் தேதி கொரோனா ஏற்பட்டது.
அவருக்கு பெரும்பாலும் டிசம்பர் 1ம் தேதி கொரோனா தாக்கி இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதேபோல் வுஹனில் இருக்கும் பல்வேறு நபர்கள் டிசம்பரில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர்.
புதிய எபிசென்டராகும் ரஷ்யா.. வேகமாக உயருகிறது.. உலகம் முழுக்க 2.5 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை!
அதற்கு முன்பே
ஆனால் தற்போது, இந்த கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றாமல் அதற்கு முன்பே வேறு ஒரு நாட்டில் பரவி இருக்குமா என்று கேள்விகள் எழுந்துள்ளது. அதாவது நமக்கு தெரிந்த வகையில் சீனாவில்தான் முதல் நபர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார். ஆனால் நமக்கு தெரியாமல் வேறு ஏதாவது ஒரு நாட்டில் ஒருவர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு இருந்தால் என்ன செய்வது என்று மருத்துவர்கள் பலர் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.
ஆராய்ச்சி முடிவு
இது தொடர்பாக உலகம் முழுக்க ஆராய்ச்சி நடந்து வருகிறது. தற்போது இருக்கும் கணக்குப்படி பிரான்சில் ஜனவரி இறுதியில்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் அதற்கு முன்பே டிசம்பரிலேயே கொரோனா பாதிப்பு பிரான்சில் ஏற்பட்டு இருக்கலாம் என்று ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் ஆண்டிமைக்ரோபியல் ஏஜெண்ட்ஸ் நிறுவனம் செய்த ஆராய்ச்சி ஒன்றில் இந்த விஷயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர்.
ஆராய்ச்சி என்ன சொல்கிறது
இந்த ஆராய்ச்சியின்படி பிரான்சில் கொரோனா போன்ற நோய் அறிகுறியோடு அனுமதிக்கப்பட்ட நபர்களின் ரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த வருடம் டிசம்பரில் மூச்சு திணறல், காய்ச்சல், தொண்டை வறட்சி உள்ளிட்ட அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட 14 ஐசியூ நோயாளிகளின் உடலில் சோதனை செய்யப்பட்டது. இவர்களில் ஒருவருக்கு கொரோனா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் பாதிலேயே இவருக்கு கொரோனா இருந்துள்ளது.
பிரான்ஸ் உண்மையான நிலை
பாரிஸை சேர்ந்த ஜீன் வெர்டியர் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற அந்த 42 வயது நபருக்கு டிசம்பர் பாதிலேயே கொரோனா ஏற்பட்டுள்ளது இதனால் உறுதி செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் இறுதியில் அவர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார். கொரோனா இருப்பது தெரியாமலே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அந்த நபர் இதற்கு முன் சீனா செல்லவே இல்லை. சீனர்களை சந்திக்கவே இல்லை.
தொடர்ந்து நடக்கும் ஆராய்ச்சி
அவருக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. இதனால் இவரை போல இன்னும் சிலருக்கு அங்கு டிசம்பரிலேயே கொரோனா வந்து இருக்குமா என்று ஆராய்ச்சி நடந்து வருகிறது . இந்த ஆராய்ச்சியை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளனர். இதேபோன்ற நோய் அறிகுறியோடு அனுமதிக்கப்பட்ட நபர்களை சோதனை செய்ய உள்ளனர். அங்கு சில நபர்கள், எங்களுக்கு கொரோனா அறிகுறி டிசம்பரிலேயே இருந்தது என்று கூற தொடங்கி உள்ளனர்.
அமெரிக்கா நிலை
பிரான்ஸில் மட்டுமில்லை அமெரிக்காவிலும் கொரோனா தாக்குதல் பிப்ரவரியில் இல்லை மாறாக டிசம்பர் மாதத்திலேயே வந்துவிட்டது என்று மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியாவில் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள சாண்டா கிளாரா கவுண்டியின் தலைமை செயலாளர் ஜெப் ஸ்மித் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கலிபோர்னியாவில் உள்ள சில மருத்துவர்களும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதிர்ச்சி அளித்தது
கலிபோர்னியாவில் பிப்ரவரி 6ம் தேதி ஒருவர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளார். அதேபோல் பிப்ரவரி 19ம் தேதி இன்னொரு நபர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளார். இவர்கள் இருவருக்கும் டிசம்பர் இரண்டாம் வாரத்திலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடல்கூறு சோதனையின் மூலம் இந்த கண்டுபிடிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இவர்கள் இருவரும் வெளிநாடு செல்லவில்லை. இது அமெரிக்காவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சீனாதான் தாயகமா?
அதனால் உண்மையில் இந்த கொரோனா வைரஸ் சீனாவில்தான் தோன்றியதா என்று கேள்வி எழுந்துள்ளது. சீனாவில்தான் இந்த வைரஸ் பரவியதா அல்லது பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த வைரஸ் தோன்றி அங்கிருந்து வேறு எங்கும் பரவியதா என்று கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் இந்த வைரஸ் ஒரே சமயத்தில் இரண்டு, மூன்று இடங்களில் கூட தோன்றி இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.