பாரீஸ் நகரத்தில் பேக்கரியில் திடீர் வெடிவிபத்து… 4 பேர் பலி… பொதுமக்கள் பீதி
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் உள்ள ஒரு பேக்கரியில் எரிவாயு கசிவினால் இன்று நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
பாரிஸ் நகரின் மத்திய பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் இன்று எரிவாயு கசிவினால் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பேக்கரி பயங்கரமாக தீப்பிடித்து எரிய தொடங்கியது.
தகவல் அறிந்து பல வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் தீயணைப்பு படை வீரர்கள் இருவர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
விபத்தின் போது அங்கு சுற்றியிருந்தவர்கள் என்ன நடக்கிறது என்பதை உணரமுடியாமல் தவித்தனர். பேக்கரியை சுற்றிலும் உள்ள பகுதிகளில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின.
காயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரின் உடல்நிலை மோசமடைந்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது.