தொடர்ந்து உயர்ந்த பெட்ரோல் விலை.. பிரான்சில் 3 லட்சம் பேர் போராட்டம்.. வெடித்தது கலவரம்!
பிரான்சில் தொடர்ந்து உயர்ந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை காரணமாக அங்கு பெரும் போராட்டம் ஏற்பட்டு இருக்கிறது.
பாரிஸ்: பிரான்சில் தொடர்ந்து உயர்ந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை காரணமாக அங்கு பெரும் போராட்டம் ஏற்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் தற்போது பெட்ரோல் டீசல் விலைதான் பெரிய பிரச்சனையாக உள்ளது. இப்போது இதன் விலை குறைந்தாலும், தேர்தலுக்கு பின் மீண்டும் ஏற்றப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் பிரான்சில் இந்த பிரச்சனை மிகப்பெரிய போராட்டத்தை உருவாக்கி உள்ளது. விலை ஏற்றத்திற்கு எதிராக மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள்.
நேற்று தொடங்கியது
நேற்றுதான் இந்த போராட்டம் முதலில் தொடங்கியது. பாரிஸின் ஆர் டி டிரோம்ப் அருகே இருக்கும் கட்டிடம் அருகே முதலில் போராட்டக்காரர்கள் கூட ஆரம்பித்தனர். நேரம் செல்ல செல்ல இந்த போராட்டம் பெரிதானது. இதையடுத்து நேற்று இந்த போராட்டத்தில் கட்டிடம் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பெரிய கலவரம்
இந்த போராட்டத்தில் நேற்று போலீசுக்கும் மக்களுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டது. இதனால் 30 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 4 போலீசாரின் துப்பாக்கி மக்களிடம் சிக்கி இருப்பதாக போலீசார் தெரிவித்து இருக்கிறார்கள். நேற்று தொடங்கிய கலவரம் இப்போது வரை நடந்து வருகிறது.
எப்படி நடக்கிறது
இந்த போராட்டத்தை ஒருங்கிணைப்பது யார் என்று யாருக்கும் தெரியாது. எல்லோரும் பேஸ்புக் பார்த்து போராட்டக்களத்திற்கு வருகிறார்கள். இதனால் போராட்டத்திற்கு தலைவர் யார் என்று விவரம் யாருக்கும் தெரியவில்லை. அதன் காரணமாகவே போராட்டத்தை கட்டுப்படுத்தவும் முடியவில்லை.
என்ன காரணம்
தற்போது இந்திய ரூபாய் மதிப்பில் பிரான்சில் பெட்ரோல் விலை 140 ரூபாய் வரை விற்கிறது. டீசல் 120 ரூபாய் வரை விற்கிறது. இதில் போன வாரம் தான் 20 சதவிகிதம் விலை ஏற்றப்பட்டது. இதன் காரணமாகத்தான் மக்கள் இந்த போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள். ஆனால் அங்கு இன்னும் விலை ஏற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.
என்ன பதில்
ஆனால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரூன், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடியாது என்று கூறியுள்ளார். சுற்றுசூழல் பாதிப்பை குறைக்கும் வகையிலேயே பெட்ரோல் டீசல் விலையை ஏற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். எந்த நிலையிலும் போராட்டத்திற்கு அடிபணிய மாட்டேன் என்றுள்ளார்.