பாரிஸில் திடீரென பயங்கர வெடி சத்தம்... மக்கள் அச்சம்... நடந்தது என்ன?
பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சிறிது நேரத்திற்கு பயங்கர வெடி வெடித்தது போன்ற பெரிய சத்தம் இன்று மதியம் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஆனால், இதற்கு விளக்கம் அளித்து இருக்கும் பாரிஸ் போலீசார், எந்த வெடி சம்பவங்களும் நடக்கவில்லை. போர் விமானம் சென்றதுதான் இதற்குக் காரணம் என்று தெரிவித்துள்ளனர். இந்த சத்தம் கேட்டபோது, கட்டிடங்கள் அதிர்வது போன்று மக்கள் உணர்ந்துள்ளனர்.
இந்த சத்தத்தால், பாரிஸ் நகரில் நடந்து கொண்டிருந்த பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் விளையாட்டு சிறிது நேரம் தடைபட்டது. வீரர்கள் விளையாட்டை நிறுத்தி விட்டு அதிர்ச்சியுடன் மேலே பார்த்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதேபோல் பெங்களூருவிலும் பெரியளவில் சத்தம் கேட்டதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அப்போதும் மக்கள் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் அது வெடி விபத்து அல்ல, போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது என்று கூறப்பட்டது.
இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரிலும் போர் விமானம் கடந்து சென்றபோது சத்தம் கேட்டதாக கூறப்பட்டது.