ம்ஹூம்... பிரான்சின் இடுப்பிலிருந்து இறங்க மறுக்கும் நியூ கலிடோனியா!
பாரிஸ்: பிரான்சை விட்டு பிரிய மாட்டோம். எங்களுக்கு விடுதலை தேவையில்லை என்று பசிபிக் கடலில் உள்ள பிரான்ஸின் ஆளுமைக்கு உட்பட்ட பிராந்தியமான நியூ கலிடோனியா திட்டமிட்டு கூறி விட்டது.
நியூ கலிடோனியாவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், விடுதலை தேவையில்லை என்று பெரும்பான்மை கலிடோனியா மக்கள் வாக்களித்துள்ளனர். இதனால் நியூ கலிடோனியா பிரான்ஸின் ஒரு பகுதியாக நீடிக்கவுள்ளது. இந்த தீர்ப்புக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டிலிருந்து கிட்டத்தட்ட 16,700 கிலோமீட்டர் தொலைவில் இந்த பிராந்தியம் அமைந்துள்ளது. நியூ கலிடோனியாவின் இந்த முடிவு பிரான்ஸ் மக்களிடத்திலும் கூட வரவேற்பைப் பெற்றுள்ளது. சரி ஏன் இப்படி அடம் பிடிக்கிறது நியூ கலிடோனியா.. வரலாற்றை சற்று திரும்பிப் பார்ப்போம்.
30 வருட விடுதலை முயற்சி
கடந்த 30 வருடமாகவே நியூ கலிடோனியாவை விடுதலை பெறச் செய்ய அங்கு போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த தீவின் பூர்வ குடிகளான கனக் இனத்தவர் ஆவர். பெரும் போராட்டங்களைத் தொடர்ந்தே வாக்கெடுப்பு நடத்த முடிவானது.
விடுவிக்க எதிர்ப்பு
இந்த வாக்கெடுப்பில் நியூ கலிடோனியா பிரான்ஸுடன் இருக்க வேண்டுமா அல்லது பிரிய வேண்டுமா என்று கேட்கப்பட்டிருந்தது. இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி 56.9 சதவீத மக்கள் விடுதலை வேண்டாம் என வாக்களித்துள்ளனர். இது போராட்டக்காரர்களுக்குப் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் அதிபர் வரவேற்பு
இந்த முடிவுக்கு பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வரவேற்பு தெரிவித்துள்ளார். பிரான்ஸ் மீதான நியூ கலிடோனியா மக்களின் எண்ணத்தையும், நம்பிக்கையையும் இது உறுதிப்படுத்தியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். பிரெஞ்சு மக்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரிவினை போராட்டம் ஏன்
நியூ கலிடோனியா பிராந்தியமானது பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவுக் கூட்டம். பிரான்ஸின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது. இங்கு வசிக்கும் பூர்வ குடி மக்கள் கனக் இனத்தவர். அதேசமயம், ஐரோப்பிய நாடுகளிலிருந்து இங்கு குடி பெயர்ந்து செட்டிலானவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் பிரான்ஸுக்கு ஆதரவானவர்கள். கனக் இனத்தவர்களிலிருந்துதான் பிரிவினை கோஷம் முதலில் எழுந்தது.
அடிமையாக இருந்தது போதும்
கனக் இனத்தவரை ஐரோப்பிய குழுக்கள் அடிமைப்படுத்தி வைத்ததே போராட்டங்களுக்கான முதல் விதையாகும். பல்வேறு ஐரோப்பிய குழுக்கள் இந்தப் பிராந்தியத்தை அடிமைப்படுத்தி வைத்திருந்தன. கடைசியாக இது பிரான்ஸ் வசம் வந்தது.
3ம் நெப்போலியன்
1853ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி மூன்றாம் நெப்போலியன், இந்தப் பிராந்தியத்தை பிரான்ஸுடன் இணைத்தார். அன்று முதல் இன்று வரை நியூ கலிடோனியா பிரான்ஸ் ஆதிக்கத்தின் கீழ் இருந்து வருகிறது. அப்போது முதலே பிரான்ஸுக்கு எதிரான போராட்டங்கள் இங்கு நடந்தபடியே உள்ளன.
பொருளாதார வளம்
பொருளாதார ரீதியாக பிரான்ஸுக்கு முக்கியமானது நியூ கலிடோனியா. இங்கு நிக்கல் அதிக அளவில் கிடைக்கிறது. அதாவது உலக நிக்கல் உற்பத்தியில் 25 சதவீதத்தை இந்த பிராந்தியம்தான் பூர்த்தி செய்கிறது. சுற்றுலா அடுத்த மிகப் பெரிய பொருளாதார சக்தியாக திகழ்கிறது.
சுதந்திரம் - கட்டுப்பாடு
பிரான்ஸ் அரசு, நியூ கலிடோனியாவுக்கு நிறைய தன்னாட்சி உரிமைகளை அளித்துள்ளது. ஆனால் பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட முக்கிய அம்சங்களில் பிரான்ஸ் அரசின் கட்டுப்பாடு அதிகம் உண்டு. அடிமைத்தனத்தின் சுவடுகள் இன்று இல்லாவிட்டாலும் கூட பிரான்ஸிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற வேட்கை கடந்த பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.
ஓரம் கட்டப்பட்ட கனக் இனத்தவர்
கனக் இனத்தவர் நீண்ட காலமாகவே பிற ஐரோப்பிய குடிமக்களால் பல்வேறு வகைகளில் புறக்கணிக்கப்பட்டு வருவதே போராட்டங்களுக்கான முக்கியக் காரணம். 80களில்தான் போராட்டங்கள் பெருமளவில் வெடித்துக் கிளம்பின. கனக் இனத்தவர் இன்னும் வறுமையில் வாடுகின்றனர். வேலையிலும் இவர்களுக்கு சமத்துவம் இல்லை. பொருளாதார ரீதியாக பிற ஐரோப்பிய குடிமக்களை விட இவர்கள் பின்தங்கியுள்ளனர்.
1988 படுகொலையால் பரபரப்பு
1988ம் ஆண்டு ஓவியா என்ற தீவில் நடந்த படுகொலையானது உலகையே உலுக்கியது. அந்த சம்பவத்தின்போது 19 கனக் இனத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பதிலடியாக 2 பிரான்ஸ் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து பிரான்ஸ் அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. அதில் 2018ம் ஆண்டு சுதந்திரம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. அந்த வாக்கெடுப்புதான் தற்போது நடந்து முடிவு வெளியாகியுள்ளது. இதுதவிர 2022ம் ஆண்டுக்குள் மேலும் 2 வாக்கெடுப்புகள் நடைபெறவுள்ளன. அதன் இறுதியில் இறுதி முடிவு எடுக்கப்படும்.