கறுப்பு பட்டியல்.. பாகிஸ்தான் ஜஸ்ட் எஸ்கேப்.. 4 மாதங்கள் மட்டுமே கெடு.. எப்ஏடிஎப் கடும் எச்சரிக்கை
Recommended Video
பாரீஸ்: தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்த வரும் 2020 பிப்ரவரி மாதம் வரை (4 மாதங்கள்) அவகாசம் அளித்து பாகிஸ்தானுக்கு சர்வதேச தீவிரவாதிகளுக்கான நிதித்தடுப்பு அமைப்பு(எப்ஏடிஎப் ) எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக 27 விதிமுறைகளை விதித்துள்ள எப்ஏடிஎப் அமைப்பு, திருப்தி அளிக்கும் வகையில் செயல்பாடு இல்லாமல் போனால் பாகிஸ்தான், கறுப்பு பட்டியலில் வைக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
தீவிரவாதிகளுக்கு நிதியுதவியைத் தடுக்கவும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையை தடுக்கவும் சர்வதேச தீவிரவாதிகளுக்கான நிதித்தடுப்பு அமைப்பு பாரிஸில் செயல்படுகிறது. இந்த அமைப்பு தீவிரவாதச் செயலுக்கு நிதியுதவி செய்து வரும் பாகிஸ்தானை கடந்த 2018 ம் ஆண்டு ஜுன் மாதம் அடர் சாம்பல் பட்டியலில் சேர்த்தது. அத்துடன் தீவிரவாதிகளுக்கு செல்லும் நிதியுதவியை தடுப்பது உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள 15 மாதம் அவகாசம் வழங்கியது.
பாரிஸில் ஆய்வு
இந்த அவகாசம் நிறைவு பெற உள்ள நிலையில், எப்ஏடிஎப் மறு ஆய்வுக் கூட்டம் கடந்த இரு நாட்களாக பாரீஸில் நடந்தது. இதில், 200-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள். அப்போது பாகிஸ்தானின் தீவிரவாத எதிர்ப்பு செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
4 மாதம் அவகாசம்
இதையடுத்து எப்ஏடிஎப் அமைப்பு பாகிஸ்தானுக்கு வரும் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவகாசம் வழங்கி உள்ளது. அதற்குள் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை திருப்தி அளிக்கும் வகையில் பாகிஸ்தான் மேற்கொள்ள வேண்டும். அதில் எந்த முன்னேற்றமும் இல்லாவிட்டால் பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
27 பணிகள் கொடுத்தோம்
இந்தியாவில் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பொறுப்பான லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தீவிரவாத குழுக்களுக்கான நிதியைக் கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான் வழங்கிய 27 விதிமுறைகளில் ஐந்து விதிமுறைகளை மட்டுமே செயல்படுத்தியதாக எப்ஏடிஎப் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பியது பாகிஸ்தான்
இதனிடையே, பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கு மலேசியா, சீனா, துருக்கி ஆகிய நாடுகள் சம்மதிக்காத காரணத்தால் தான் தப்பியுள்ளது.. ஒரு நாடு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பதற்கு 3 நாடுகள் ஆதரவு இருந்தால் போதும் என்பதால் கடும் எச்சரிக்கை மட்டும்விடுக்கப்பட்டுள்ளது. எனினும் பிப்ரவரி மாதம் வரை வழங்கப்பட்டுள்ள அவகாசத்திற்குள் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காவிட்டால் கறுப்பு பட்டியலில் சேருவது உறுதியாகி விடும்.
கறுப்பு பட்டியல்
கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படும் நாடுகளுக்க உலக வங்கி, ஐஎம்எப், ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றிலிருந்து உதவிகள் கிடைக்காது. நிதியுதவி இல்லாமல் அந்த நாடு திண்டாட வேண்டிய நிலை ஏற்படும். தற்போது ஈரான் மற்றும் வடகொரியா ஆகியவை கறுப்பு பட்டியலில் உள்ளன.