புரோட்டீன் நிறைந்த...கொரோனா தடுப்பு மருந்து...பிரான்ஸ் பிரிட்டன் கண்டுபிடிப்பு!!
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் சனோஃபி மற்றும் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஜிஎஸ்கே இரண்டும் இணைந்து கண்டுபிடித்து இருக்கும் கொரோனா தடுப்பு மருந்து மனித ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளன.
இந்த இரண்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து இந்த தடுப்பு மருந்தை கண்டறிந்துள்ளன. இதன் முதல் கட்ட மற்றும் இரண்டாம் மனித பரிசோதனை துவங்கப்பட்டு இருப்பதாக இன்று அறிவித்துள்ளன. உலகிற்கு இன்று சவாலாக இருந்து வரும் கொரோனா வைரஸை தங்களது தடுப்பு மருந்து கட்டுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பருவகால குளிர்காய்ச்சலுக்காக ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் ஊசி மருந்தில் இருந்து மறுசீரமைப்பு முறையில் புரோட்டீன் சத்து அடிப்படையிலான மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த புரோட்டீன் சத்து நிறைந்த மருந்துதான் தடுப்பு மருந்தாக இருக்க முடியும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறி வருகின்றனர். ஆனாலும், இந்த கொரோனா வைரஸ் உருமாற்றம், பிறழ்வு அல்லது மரபணு மாற்றம் செய்து கொண்டே இருப்பதால், சரியான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் தடுமாறி வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டின் சனோஃபி மற்றும் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஜிஎஸ்கே தயாரிப்பு தடுப்பு மருந்தின் முதல் கட்ட முடிவுகள் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று தெரிகிறது. இந்த பரிசோதனைகளில் வெற்றி கிடைத்தால் 2021ஆம் ஆண்டின் முதல் அரை ஆண்டில் மருந்து தயாரிக்க அனுமதி பெறப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
கொரோனா நோயாளிகளுக்கு... கார்டிகோஸ்டீராய்டு மருந்து... உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை!!
இதுகுறித்து சனோஃபி பாஸ்ட்சரின் சர்வதேச துணைத்தலைவர் தாமஸ் டிரயோம்பி கூறுகையில், ''எங்களது மருத்துவ ஆய்வின் துவக்கம் ஒரு முக்கியமான படியாகும், மேலும் கொரோனாவை தோற்கடிக்க உதவும் சாத்தியமான தடுப்பூசியை நெருங்கிக் கொண்டு இருக்கிறோம். எங்களது மருத்துவக் குழு தொடர்ந்து இயங்கிக் கொண்டுள்ளனர். நடப்பாண்டு இறுதிக்குள் மருந்து கண்டுபிடித்து விட்டால், மூன்றாம் கட்ட ஆய்வும் உடனடியாக துவங்கப்படும்.
எங்களது ருமாட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் மருந்து கொரோனாவுக்கு குணம் அளிக்கவில்லை. எனவே கொரோனாவை கட்டுபடுத்தும் தடுப்பு மருந்து ஆய்வில் கவனம் செலுத்தி வருகிறோம்'' என்றார்.