நாளை ரிசல்ட்.. இன்று பிரான்சில் ஐஏஎப் அலுவலகத்தில் பரபரப்பு.. ரபேல் ஆவணங்களை திருட முயற்சி?
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள இந்திய விமானப்படை அலுவலகத்தில் ரபேல் ஆவணங்கள் இருக்கும் இடத்தில் கொள்ளையடிக்க முயற்சி நடந்து உள்ளது.
பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள இந்திய விமானப்படை அலுவலகத்தில் ரபேல் ஆவணங்கள் இருக்கும் இடத்தில் கொள்ளையடிக்க முயற்சி நடந்து உள்ளது.
ரபேல் ஒப்பந்தம் செய்யப்பட்டு அதன் மீதான வழக்கு ஒரு பக்கம் நடந்து முடிந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இதற்கான தீர்ப்பு எப்போது வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மிக முக்கியமான கட்டத்தில் நாளை லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளிவர இருக்கிறது. இதை பொறுத்தே ரபேல் ஒப்பந்தத்தில் அடுத்த செயல்பாடுகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிக்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் ரபேல் ஒப்பந்தத்தின்படி 36 ரபேல் விமானங்கள் பாரிசில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்படும். மீதமுள்ள விமானங்கள் ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் இங்கு தயாரிக்கப்படும். பாரிசில் உள்ள இந்திய விமானப்படை அலுவலகத்தில் ரபேல் விமானங்களை உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. 36 விமானங்களை உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நுழைய முயற்சி
இந்த நிலையில் இந்த அலுவலகத்தில் இன்று சிலர் திருட்டு தனமாக நுழைய முயன்று இருக்கிறார்கள். இவர்களை தற்போது பிரான்ஸ் போலீஸ் கைது செய்து இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. ஆனால் எத்தனை பேர் திருட முயன்றார்கள், யார் கைது செய்யப்பட்டது, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
உறுதிபடுத்தி உள்ளது
ரபேல் விமானங்களை இந்தியாவிற்கு வழங்கும் பார்ட்னரான டஸால்ட் நிறுவனம் இதை உறுதிப்படுத்தி உள்ளது. இதனால் அங்கு திருட நடந்த முயற்சி உறுதியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து மேலும் விவரங்களை வெளியிட டஸால்ட் நிறுவனம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
முக்கியம்
இந்த அலுவலகத்தில் ரபேல் ஒப்பந்தங்கள் குறித்த முக்கிய ஆவணங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதை திருடுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையா இது என்று கேள்வி எழுந்துள்ளது. ரபேல் வழக்கில் சிபிஐ விசாரிக்கலாமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.