காஷ்மீர் விவகாரத்தில் பின்வாங்கிய டொனால்ட் ட்ரம்ப்.. இந்திய உறுதிக்கு கிடைத்தது வெற்றி
Recommended Video
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு இன்று நிகழ்ந்தது.
இந்த முறை ஜி-7 உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக இந்தியா, ஆஸ்திரேலியா, சிலி உள்ளிட்ட 6 நாடுகளின் தலைவர்களும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க்கும் பங்கேற்றுள்ளனர்.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே, சமரசம் பேச அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்த நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வந்த நிலையில், மோடியுடனான அவரது சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது.
பேச்சுவார்த்தைக்கு இடையில் மூன்றாவது நாட்டுக்கு இடமில்லை என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்கா இன்று ஏற்றுக்கொண்டதை, ட்ரம்ப் உறுதி செய்தார்.
இரு தலைவர்களும் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் கூறியதாவது: காஷ்மீர் விவகாரம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் இருதரப்பு ரீதியாக தீர்க்கப்பட வேண்டும். இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார். இதன் மூலம், காஷ்மீர் விவகாரத்தில், மூக்கை நுழைக்கப்போவதில்லை என்பதை ட்ரம்ப் உறுதி செய்துள்ளார். இது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.
மேலும் அவர் கூறுகையில், நாங்கள் இந்தியாவுடன் அதிக வர்த்தகத்தை செய்கிறோம். இது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் ஒரு சாதனை அளவாக அதிகரித்துள்ளது என்றார்.
இந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் மோடி கூறுகையில், அமெரிக்காவுடன் இணைந்து பல துறைகளிலும் பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றதும் நான் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். தீவிரவாதம், ஏழ்மை ஆகியவற்றை ஒழிக்க பாகிஸ்தான் முயற்சி செய்ய வேண்டும். இது தொடர்பாக இந்தியா தனது ஒத்துழைப்பு அளிக்கும் என்று தெரிவித்திருந்தேன்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள அனைத்து பிரச்சினைகளும் இருதரப்பு இயல்புடையவை, வேறு எந்த நாட்டின் உதவியையும் நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவும், பாகிஸ்தானும் 1947ம் ஆண்டுக்கு, முன்னர் ஒரு நாடாக இருந்தன. நாங்கள் தீர்வுகளை எட்டுவோம் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு மோடி தெரிவித்தார்.