ஒருநாள் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த 9-ம்வகுப்பு மாணவி... இந்த கவுரவம் எதற்கு தெரியுமா!
பாட்னா: பீகாரை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி ஒருவர், போலீஸ் நிலையத்தில் ஒருநாள் இன்ஸ்பெக்டராக பணியாற்றி கவுரவிக்கப்பட்டார்.
9-ம் படித்து வரும் அந்த மாணவி, கராத்தே போட்டியில் பிகாருக்காக தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்று குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிகார் மாநிலம் பால்லியா பகுதியில் 9-ம் படித்து வருபவர் 13 வயது மாணவி அஞ்சலி குமாரி. கராத்தே போட்டியில் தலைசிறந்து விளங்கும் அஞ்சலி குமாரி, பிகார் சார்பில் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் வென்று தங்கம், வெண்கலப் பதக்கங்களை குவித்துள்ளார். அஞ்சலி குமாரியின் தந்தை உள்ளூர் கராத்தே பயிற்சியாளராக உள்ளார்.
பால்லியா போலீஸ் நிலையத்தில் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரியாகப் பணிபுரிந்து வருபவர் அவதேஷ் சரோஜ். அஞ்சலி குமாரியின் சாதனைகள் குறித்துக் கேள்விப்பட்ட அவதேஷ் சரோஜ், தனது தலைமையின் கீழ் இயங்கும் பால்லியா காவல் நிலையத்தில், அவரை ஒரு நாள் இன்ஸ்பெக்டராக பணியமர்த்த முடிவு செய்தார்.
அதன்படி குடியரசு தினம் அன்று துணை பிராந்திய அதிகாரி, டிஎஸ்பி உள்ளிட்டோர் முன்னிலையில் ஒருநாள் இன்ஸபெக்டராக பணியில் அமர்த்தப்பட்டார் அஞ்சலி குமாரி. பதவியேற்ற சில நிமிடங்களிலேயே பொதுமக்களில் ஒருவர், அருகிலுள்ள பள்ளி முன்பே ஏற்படும் சாலைப் போக்குவரத்து நெரிசல் குறித்துப் புகார் மனு அளித்தார். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த மாணவி அஞ்சலி குமாரி, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு இதுகுறித்து குறிப்பு எழுதினார்.
இது தொடர்பாக அவதேஷ் சரோஜ் கூறுகையில், அனில் கபூர் நடித்த திரைப்படம் ஒன்றில் போராட்டக்காரர் ஒருவர் ஒருநாள் முதல்வராக மாறி, மாநிலத்தின் நிலையையே மாற்றி அமைப்பார். அதேபோல் நாமும் முயற்சிக்கலாமே என்று தோன்றியது. காவல்துறையில் பணியாற்ற இளைஞர்களை அமர்த்துவதன் மூலம் சமூகத்தில் முக்கியமான அடியை எடுத்து வைக்கிறோம் என்றார்.