பீகார்: 'சிஏஏ' வெறுப்பு பேச்சால் வெடித்தது மோதல்.. யோகியை 'நான்சென்ஸ்' என்று விளாசிய நிதிஷ் குமார்
பாட்னா: பீகார் மாநிலத்தில் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கும் நிலையில், கூட்டணி கட்சியான, பாஜகவைச் சேர்ந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு கடுமையாக எதிர்வினையாற்றி உள்ளார் நிதீஷ் குமார்.
பீகார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இரண்டு கட்ட தேர்தல்கள் முடிவடைந்து விட்ட நிலையில், மூன்றாவது கட்ட தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
தேர்தல் முடிவடைந்ததும் அன்று மாலையே கருத்துக் கணிப்புகளை பல்வேறு சர்வே அமைப்புகளும் வெளியிட உள்ளன.
இரு பெரும் கூட்டணிகள்
பீகாரில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. எதிர்தரப்பில், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மகாகத்பந்தன் என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த நிலையில், பாஜகவின் முக்கிய பிரபலங்களில் ஒருவரும் உத்தரப் பிரதேச மாநில முதல்வருமான யோகி ஆதித்யநாத் தெரிவித்த ஒரு கருத்துக்கு நேர் எதிர் கருத்தை நிதிஷ் குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யோகி ஆதித்யநாத் பேச்சு
பாஜக கூட்டணிக்கு ஆதரவு கேட்டு, கதிகார், சட்டசபை தேர்தல் தொகுதியில், நேற்று பிரசாரம் செய்தார் யோகி ஆதித்யநாத். அப்போது அவர் இந்தியாவிற்குள் ஊடுருவ முயல்வோர்களை இந்திய அரசு தூக்கி வெளியே வீசும் என்று ஆவேசமாக தெரிவித்து இருந்தார். குடியுரிமை சட்ட திருத்தம், குடிமக்கள் பதிவேடு திட்டம் உள்ளிட்டவற்றை மனதில் வைத்து யோகி ஆதித்யநாத் இவ்வாறு பேசியிருந்தார். மேலும் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பிஹாரில் அமைந்தால் டெல்லி ஷாஹின்பாக் போல அராஜகம் கட்டவிழ்த்து விடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
நான்சென்ஸ்
இந்த நிலையில்தான் நிதிஷ்குமார், கிஷான்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசுகையில், சிலர் மோசமான பரப்புரைகளை செய்துவருகிறார்கள். யார், யாரை இந்த நாட்டில் இருந்து வெளியேற்றுவது? இந்தியாவை சேர்ந்த யாரையும், யாரும் நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு அதிகாரம் கிடையாது. "faltu baat" (நான் சென்ஸ்) யார், அப்படி பேசியது? அனைவரையும் ஒன்றிணைக்கும் சகோதரத்துவம்தான் நாம் உருவாக்கி வைத்திருக்கும் அடிப்படை என்று பேசியுள்ளார் நிதிஷ்குமார்.
துண்டு போடும் நிதிஷ் குமார்
நிதிஷ்குமார் கட்சியை விடவும் பாஜக அதிக தொகுதிகளை வெல்லும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில், ராம்விலாஸ் பாஸ்வான் மகன், சிராக் பாஸ்வான் கட்சியுடன் சேர்ந்து நிதிஷ் குமாரை கழட்டிவிட்டு பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் பேச்சு இருக்கிறது. இந்த நிலையில்தான் திடீரென யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு எதிராக ஆவேசமாகி உள்ளார் நிதிஷ்குமார். இதன்மூலம் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், தேர்தலுக்கு பிறகு லாலு பிரசாத் யாதவ் கட்சியுடன் முன்பு மாதிரி நிதிஷ்குமார் கூட்டணி அமைக்க இப்போதே துண்டு போடுகிறார் என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதுபோன்ற சந்தேகங்கள் ஆளும் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்க செய்துவிடும் அரசியல் நிபுணர்கள்.