9 வருடத்திற்கு பின் ஒரே மேடையில் மோடி - நிதிஷ்.. பீகாரில் நடந்த மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டம்!
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பீகாரில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக கட்சி மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை இன்று நடத்துகிறது.
பாட்னா: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பீகாரில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக கட்சி மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை இன்று நடத்தியுள்ளது.
லோக்சபா தேர்தல் பரபரப்பு மீண்டும் தொடங்கிவிட்டது. காஷ்மீர் பிரச்சனை காரணமாக கொஞ்சம் ஓய்ந்து இருந்த தேர்தல் பரபரப்பு மீண்டும் சூடுபிடித்து இருக்கிறது.
இன்று பிரதமர் மோடி தலைமையில் பீகாரில் மிகப்பெரிய பிரச்சார கூட்டம் நடந்தது. இதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் கலந்து கொண்டது.
ரபேல் விமானம் மட்டும் இருந்திருந்தால் கதையே வேறு.. காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
பீகார் பாஜக கூட்டணி
பீகாரில் பாஜக பெரிய கூட்டணியை அமைத்து இருக்கிறது. அங்கு ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனதா கட்சி ஆகியவை பாஜகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக இரண்டு கட்சிகளும் தலா 40 இடங்களில் 17 இடங்களில் போட்டியிடுகிறது. லோக் ஜனதா கட்சி மொத்தம் 6 இடங்களில் போட்டியிடுகிறது.
9 வருடம்
பீகாரில் இன்று நடக்கும் பிரச்சாரத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொள்கிறார். கடைசியாக 9 வருடங்களுக்கு முன் மோடியும், நிதிஷ் குமாரும் ஒரே மேடையில் அமர்ந்து பேசினார்கள். 2010ம் ஆண்டுக்கு பின் இப்போதுதான் இவர்கள் மீண்டும் ஒன்றாக சேர்ந்து பிரச்சாரம் செய்ய இருக்கிறார்கள்.
ஒரு மாதம்
இந்த பொதுக்கூட்டம் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாதம் முன் காங்கிரஸ் கட்சி இதே இடத்தில் தனது பீகார் கூட்டணியுடன் பொதுக்கூட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
என்ன பேச திட்டம்
இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, காஷ்மீர் தாக்குதல் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அபிநந்தன் குறித்தும், ரபேல் ஒப்பந்தம் குறித்தும் பேசுவார் என்று எதிர்பார்க்கிறார்கள். காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு பின் மோடி கலந்து கொள்ளும் மிகப்பெரிய பொதுக்கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.