பீகார் முதல் கட்ட வாக்குப் பதிவு: 30% வேட்பாளர்கள் மீது கொலை, கொள்ளை, பலாத்கார வழக்குகள்!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் 30% வேட்பாளர்கள் கொலை, கொள்ளை, பலாத்கார வழக்குகளில் சிக்கியவர்கள்.
பீகார் சட்டசபைக்கு அக்டோபர் 28-ந் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 3 கட்டங்களாக பீகார் தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து வாக்குகளும் நவம்பர் 10-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
74 சட்டசபை தொகுதிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் மொத்தம் 1066 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 320 பேர் மீது கொலை, பணம் பறிப்பு, பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளன. இத்தகைய குற்ற பின்னணி கொண்டவர்களை அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்களாக்கி இருப்பது லாலுவின் ஆர்ஜேடி கட்சிதான்.
பீகார்:பலாத்கார வழக்கில் சிக்கிய 2 ஆர்ஜேடி சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு நோ சீட்..மனைவிகளுக்கு வாய்ப்பு
ஆனந்த்சிங்
ஆர்ஜேடியின் ஆனந்த்சிங் என்ற வேட்பாளர் மோகமா சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் மீது மட்டும் 38 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 7 கொலை வழக்குகள். எஞ்சியவை அனைத்தும் ஆட்கடத்தல், பணம் பறிப்பு தொடர்பானவை. 2005-ம் ஆண்டு ஜேடியூ வேட்பாளராக போட்டியிட்டு சூரஜ் பான் என்ற மற்றொரு கிரிமினல் வேட்பாளரை தோற்கடித்தவர் ஆனந்த் சிங். 2015-ல் சுயேட்சையாக போட்டியிட்டும் வெற்றி பெற்றார் ஆனந்த்சிங்.
தாதா லால் யாதவ்
ஆர்ஜேடி இன்னொரு தாதாவை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது. ரீட் லால் யாதவ் என்ற தாதா தனாபூர் சட்டசபை தொகுதி வேட்பாளராக்கப்பட்டுள்ளார். அண்மையில்தான் இவர் சிறையில் இருந்து வெளியே வந்தவரும் கூட. நிலமோசடி, ஆட்கடத்தல், கொலை முயற்சி என அத்தனை வழக்குகளும் இவர்மீது உள்ளது. இருந்தபோதும் மக்களுக்கு சேவை செய்யத்தான் இவர்களையும் வேட்பாளர்களாக்கி இருக்கிறோம் என வாதிடுகிறது ஆர்ஜேடி.
மனைவிகளை வேட்பாளர்களாக்கியவர்கள்
அரசியல்வாதியாக அவதாரம் எடுத்த தாதாக்கள், மனைவிகளையும் வேட்பாளர்களாக்கி இருக்கின்றனர். இதிலும் ஆர்ஜேடிதான் முன்னிலை வகிக்கிறது. சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சிறையில் இருக்கும் ராஜ்பல்லவ் யாதவ் என்ற எம்.எல்.ஏ.வின் மனைவி விபா தேவி இப்போது தேர்தலில் போட்டியிடுகிறார். 1994-ல் தலித் மாஜிஸ்திரேட்டை படுகொலை செய்து ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ராஜ்புத் ஜாதி தலைவரான ஆனந்த் மோகன், மகன், மனைவி 2 பேருக்குமே ஆர்ஜேடி சீட் கொடுத்திருக்கிறது.
மாஜி எம்பி ராமாசிங்
இன்னொரு தாதா ராமாசிங்கின் மனைவி வீணா சிங்கும் இந்த தேர்தல் களத்தில் போட்டியிடுகிறார். கடத்தல், கொலை என பல்வேறு வழக்குகளில் சிக்கிய மாஜி எம்பிதான் ராமாசிங். இவர் ஆர்ஜேடியில் இணைய கட்சியின் மூத்த தலைவர் ரகுவன்ஸ் பிரசாத் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ரகுவன்ஸ் பிரசாத் கடந்த மாதம் மறையும் வரை இந்த எதிர்ப்பில் உறுதியாகவும் இருந்தார். ஜேடியூ, பாஜக கட்சிகளும் தங்கள் பங்குக்கு சில தாதாக்களையும் கொலைகாரர்களையும் வேட்பாளர்களாகவும் நிறுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.