தாறுமாறாக ஏறும் விலை.. பாட்னாவில் ரூ 8 லட்சம் வெங்காய மூட்டைகள் கொள்ளை.. இத கூடவா திருடுவாங்க!
பாட்னா: பாட்னாவில் ரூ. 8 லட்சம் மதிப்பிலான வெங்காய மூட்டைகள் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் வெங்காயத்தின் விலை கடுமையான அளவுக்கு உயர்ந்துவிட்டது. வெங்காயத்தை அதிக உற்பத்தி செய்யும் மாநிலங்களான மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது. இதனால் உற்பத்தி குறைந்ததோடு அதன் வரத்தும் குறைந்துவிட்டது.
இதனால் வெங்காயத்தின் விலை ரூ 70 முதல் 80 வரை விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏறி வரும் விலையால் மக்கள் வெங்காயம் வாங்குவதை ஓரளவுக்கு நிறுத்தியுள்ளனர். பாட்னாவில் வெங்காயத்தின் விலை ரூ 100 வரை விற்று வருகிறது.
கொள்ளை
இந்த நிலையில் பாட்னாவில் ஒரு குடோனில் வைக்கப்பட்டிருந்த வெங்காய மூட்டைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அதாவது 328 சாக்கு மூட்டைகளில் இருந்த வெங்காயத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
திருட்டு
இந்த மூட்டைகளில் சுமார் 100 கிலோ வெங்காயம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கல்லாபெட்டியில் இருந்த ரூ.1.73 லட்சம் பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.
விசாரணை
இதையடுத்து இந்த வெங்காய குடோன் வைத்துள்ள தீராஜ் குமார் மற்றும் அவரது 3 பார்ட்னர்களும் இணைந்து போலீஸில் புகார் அளித்துள்ளனர். வெங்காயத்தை பதுக்கும் நோக்கில் இந்த திருட்டு புகார் கூறப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்ணீர்
வைரம், தங்கம், வெள்ளி விலைகள் உயர்வாலும் அதற்கென ஒரு மதிப்பு இருப்பதாலும் ஆங்காங்கே பணம், நகை ஆகியன திருட்டு போவதை பார்த்துள்ளோம். ஒரு கட்டத்தில் தண்ணீர் பஞ்சத்தால் இது போன்ற வடநாட்டில் பேரல்களில் பிடித்து வைக்கப்படும் தண்ணீருக்கு பூட்டு போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போது வெங்காயம் பொக்கிஷமாக கருதப்படுகிறது.