வாரிசு அரசியல் நடத்தினா கட்சிக்கு வாய்க்கரிசிதான்- நிதிஷின் ஜேடியூவில் ஐக்கியமான ஆர்ஜேடி எம்எல்சிகள்
பாட்னா: பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் 8 எம்.எல்.சிகளில் 5 பேர் கூண்டோடு முதல்வர் நிதிஷ்குமார் யாதவின் ஐக்கிய ஜனதா தளத்தில் ஐக்கியமாகினர்.
பீகாரில் லாலு பிரசாத் யாதவ் தலைமையில் கோலோச்சியது ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி). பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான அரசியல் கட்சியாக விஸ்வரூபம் எடுத்தது.
மருத்துவ விடுப்பில் ஜெயந்தி.. சென்னை மருத்துவக் கல்லூரி டீனாக தீரனிராஜன் நியமனம்
அடேங்கப்பா குடும்ப அரசியல்
ஆனால் லாலுவின் மனைவி, மகன்கள், மகள்கள் என ஒட்டுமொத்த குடும்பமுமே ஆர்ஜேடியில் ஆட்டிப் படைத்தனர். இதனால் ஆர்ஜேடி கட்சியே காணாமல் போகும் நிலைக்கு வந்துவிட்டது. அதுவும் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு சிறைக்குப் போனதால் தேஜஸ்வி யாதவ் தலைமையில் ஆர்ஜேடி இயங்கும் என அறிவித்த நாள் முதலே அஸ்தமனத்தை நோக்கி நகர்ந்துவிட்டது இந்த கட்சி.
கூண்டோடு கட்சி தாவல்
இந்த நிலையில் பீகார் சட்ட மேலவைக்கு ஜூலை 7-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் ஆர்ஜேடி கட்சியின் 8 எம்.எல்.சி.களில் 5 பேர் அப்படியே முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்து ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்துவிட்டனர்.
வாரிசு அரசியல்தான்
ஆர்ஜேடி கட்சியின் மிக மூத்த தலைவரான ரகுவன்ஸ் பிரசாந்த் சிங் கூட தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி கட்சி மாறிய எம்.எல்.சி.க்கள் ஒரே கோரசாக சொல்வது, சகிக்க முடியாத குடும்ப அரசியலை இனியும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுதான்.
கட்சியினர் போராட்டம்
இதனிடையே ஆர்ஜேடி, சட்ட மேலவை தேர்தலில் ஜாதி அடிப்படையில் 3 பேரை நிறுத்த முடிவு செய்திருக்கிறது. ஆனால் எங்களுக்குத்தான் சீட் வேண்டும் என்பதை வலியுறுத்தி ராபரிதேவி வீடு முன்பாக ஆர்ஜேடி தலைவர்கள் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இப்படியே போய்க் கொண்டிருந்தால் ஆர்ஜேடி கட்சியை லாலுவின் வீட்டில்தான் தேட வேண்டிய நிலை வரும் என்கின்றனர் பீகார் அரசியல் வல்லுநர்கள்.