பீகாரில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர் படுகொலை- 6 இந்துத்துவா தீவிரவாதிகள் கைது
பாட்னா: பீகாரில் தேசிய கொடியை பிடித்தபடி குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட அமீர் ஹன்ஸ்லா (18) படுகொலை வழக்கில் இந்துத்துவா தீவிரவாதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீகாரின் புல்வாரி ஷரீப் பகுதியில் டிசம்பர் 21-ல் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் 18 வயது இளைஞரான அமீர் ஹன்ஸ்லாவும் பங்கேற்றார். இதில் கையில் தேசிய கொடியை பிடித்தபடி அமீர் முழக்கங்களை எழுப்பினார்.
இப்பேரணியில் வன்முறை ஏற்பட்ட நிலையில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் அமீர் ஹன்ஸ்லாவும் பேரணியைவிட்டு வெளியேறி வீட்டுக்கு திரும்பினார். ஆனால் அமீர் ஹன்ஸ்லா வீட்டுக்கு திரும்பவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
இந்நிலையில் 10 நாட்களுக்குப் பின்னர் அமீர் ஹன்ஸ்லாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணைகளில் அமீர் ஹன்ஸ்லா அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளில் இந்து புத்ரா சங்காதன், இந்து சமாஜ் சங்காதன் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்து புத்ரா சங்காதன் உள்ளிட்ட 19 இந்துத்துவா தீவிரவாத அமைப்புகளை பீகார் போலீஸ் கண்காணித்து வந்தனர்.
அத்துடன் சமூக வலைதளங்களில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்களில் வன்முறையில் ஈடுபட வேண்டும் என்று வீடியோ பதிவுகளை வெளியிட்ட 2 இந்துத்துவா தீவிரவாதிகளையும் பீகார் போலீசார் தேடி வருகின்றனர்.