முத்தலாக்கை ஏற்காததால் கோபம்.. ஆத்திரத்தில் மனைவியை கொன்று எரித்த கணவர்.. அதிர்ச்சி!
முத்தலாக் மூலம் அளிக்கப்பட்ட விவகாரத்தை ஏற்றுக்கொள்ளாத பெண் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.
பாட்னா: முத்தலாக் மூலம் அளிக்கப்பட்ட விவகாரத்தை ஏற்றுக்கொள்ளாத பெண் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
இந்தியாவில் தற்போது முத்தலாக் முறை தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில்தான் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில்தான் அதே முத்தலாக் காரணமாக பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேபால் எல்லையில் இருக்கும் பீகார் கிராமமான காத்ரா என்றா பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அந்த பகுதியை சேர்ந்த சயீதா என்ற பெண்ணை அதே கிராமத்தை சேர்ந்த நபீஸ் என்ற இளைஞர் 6 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
நபீஸ் மும்பையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தையும் இருக்கிறது. இவர்கள் மன வாழ்க்கை அடிக்கடி பிரச்சனையுடன் சென்று உள்ளது.
அடிக்கடி பணம் மற்றும் நகை கேட்டு நபீஸ் தனது மனைவி சயீதாவை அடித்துள்ளார். அதேபோல் ஏற்பட்ட சண்டையில் கடந்த 6ம் தேதி சயீதாவிற்கு போன் செய்த நபீஸ் மூன்று முறை தலாக் என்று சொல்லி அந்த பெண்ணை விவாகரத்து செய்விட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து சயீதா தன்னுடைய சொந்த வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன்பின் பக்ரீத் அன்று சயீதாவின் அப்பா நபீஸ் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீஸ் இருவருக்கும் சமாதானம் செய்து வீட்டிற்கு ஒன்றாக அனுப்பி வைத்துள்ளனர். சயீத் நபீஸுடன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால் அதற்கு மறுநாளே இவர்கள் இருவருக்கும் மீண்டும் சண்டை வந்துள்ளது. இதில் சயீதாவை மோசமாக தாக்கிய நபீஸ் தனது உறவினர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். அந்த பெண்ணை மிக கொடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். அதன்பின் சயீதா உடலை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து தற்போது போலீசில் சயீத் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். வரதட்சணை கொடுமை பிரிவின் கீழ் இந்த வழக்கு பதியப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் போலீசார் இந்த வழக்கில் முத்தலாக் தடுப்பு சட்டப்பிரிவை பயன்படுத்தவில்லை என்று பெண்ணின் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர்.