ரயிலில் தம் அடித்தவரை தட்டிக் கேட்ட கர்ப்பிணி பெண்.. கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட பரிதாபம்!
பீகாரில், ரயிலில் சிகரெட் பிடித்தவரை தட்டிக்கேட்ட கர்ப்பிணி பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாட்னா: பீகாரில், ரயிலில் சிகரெட் பிடித்தவரை தட்டிக்கேட்ட கர்ப்பிணி பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப்பில் இருந்து பீகார் நோக்கி சென்று ஜாலியன் வாலாபாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த ரயிலில் 45 வயது நிரம்பிய கர்ப்பிணி பெண்ணான சினாத் தேவி வந்துள்ளார்.
பொது வகுப்பில் அவருடன் அவரின் குடும்ப உறுப்பினர்களும் வந்துள்ளனர். அதே வகுப்பில் வந்த சோனு யாதவ் என்ற நபருக்கும் அவருக்கும்தான் சண்டை வந்துள்ளது.
இருவருக்கும் சண்டை
சோனு யாதவ் ரயிலில் அமர்ந்து கொண்டு சிகரெட் பிடித்துள்ளார். இதனால், சினாத் தேவி சிகரெட் பிடிக்காதீர்கள், நான் கர்ப்பிணி பெண் என்று கூறியுள்ளார். அதை கேட்காத யாதவ் அந்த பெண்ணுடன் சண்டையிட்டு இருக்கிறார். அந்த பெண்ணை மோசமான வார்த்தைகளில் திட்டி இருக்கிறார்.
கழுத்தை நெரித்தார்
இந்த நிலையில் சண்டை இருவருக்கும் இடையில் பெரிதாகி உள்ளது. இதையடுத்து அந்த பெண்ணின் கழுத்தை அந்த நபர் நெரித்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை தடுக்க முயன்று இருக்கிறார்கள். அவர்களை தள்ளிவிட்டுவிட்டு அந்த பெண்ணின் கழுத்தை இவர் நெரித்துள்ளார்.
மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்
இதையடுத்து அந்த பெண் மயங்கி விழுந்தார். அதற்கு அடுத்த ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. அந்த பெண் வேகவேகமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அந்த பெண் மரணம் அடைந்துவிட்டார்.
கைது செய்யப்பட்டார்
அந்த பெண் 7 மாத கர்ப்பிணி ஆவார். அவரின் குழந்தையும் மரணம் அடைந்துவிட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கொலையை செய்த சோனு யாதவ் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.