பீகாரில் பாஜக-ஜேடியூ கூட்டணிக்கு ஆட்சிக்கு அலாரம்... லாலுவின் ஆர்ஜேடி தனிப்பெரும் கட்சியாக உருமாறியது!
பாட்னா: பீகாரில் ஓவைசி கட்சியின் மொத்தம் உள்ள 5 எம்.எல்.ஏக்களில் 4 பேர் கூண்டோடு லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடியில் இணைந்தனர். இதனையடுத்து பீகார் சட்டசபையில் தனிப்பெரும் கட்சியாக ஆர்ஜேடி உருவெடுத்துள்ளது. இதனால் ஆளும் பாஜக-ஜேடியூ கூட்டணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜேடியூ-பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து தேர்தல் களம் கண்டது. பீகாரின் 243 தொகுதிகளில் ஆர்ஜேடி- 144; காங்கிரஸ்- 70; இடதுசாரிகள் 29 இடங்களில் போட்டியிட்டன.
பீகாரில் பரபரப்பு: ஓவைசி கட்சியின் 5 எம்.எல்.ஏக்களில் 4 பேர் கூண்டோடு லாலுவின் ஆர்ஜேடியில் ஐக்கியம்!
ஓவைசி எம்.எல்.ஏக்கள் தாவல்
2020-ம் ஆண்டு தேர்தலில் பாஜக 74; ஜேடியூ 43; ஆர்ஜேடி; 75; காங்கிரஸ் 19; இடதுசாரிகள் 15; ஓவைசி கட்சி - 5 எம்.எல்.ஏக்கள் கிடைத்தன. பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆர்ஜேடிக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ. கிடைத்தது. தற்போது ஓவைசி கட்சியின் 4 எம்.எல்.ஏக்கள் ஜேடியூவில் இணைந்துள்ளனர். இதனால் ஜேடியூவின் பலம் மொத்தம் 80 ஆக அதிகரித்துள்ளது. பீகார் சட்டசபையில் ஜேடியூ தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
பெரும்பான்மைக்கு பக்கத்தில்..
பீகாரில் மொத்தம் 243 எம்.எல்.ஏக்கள். பீகர் சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை 122 எம்.எல்.ஏக்கள். தற்போதைய நிலையில் ஆளும் ஜேடியூ-பாஜக கூட்டணிக்கு 122 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்; ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணிக்கு 117 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஆர்ஜேடி கூட்டணி பெரும்பான்மைக்கு தேவை 7 எம்.எல்.ஏக்கள் மட்டும்தான்.
ஜேடியூ-ஆர்ஜேடி
பீகாரில் 2020 சட்டசபை தேர்தலுக்கு முன்பும் பின்பும் இப்போதும் ஜேடியூ-பாஜக இடையே மோதல்கள் தொடருகின்றன. அருணாச்சல பிரதேசத்தில் ஜேடியூவின் 6 எம்.எல்.ஏக்களை பாஜக கூட்டணியில் சேர்த்ததை இப்போதும் ஜேடியூவால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால் ஆர்ஜேடியுடன் அவ்வப்போது பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நட்பு பாராட்டியும் வருகிறார். பீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணி நீண்டகாலம் நீடிக்காது என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
ஆட்சிக்கு நெருக்கடி
இந்த பின்னணியில் பீகாரில் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன. அதனால் ஆளும் ஜேடியூ-பாஜக கூட்டணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பாஜகவுடனான உறவை ஜேடியூ துண்டித்துக் கொண்டால் ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் ப்ளஸ் ஜேடியூ இணைந்து வலுவான ஆட்சியை அமைக்கவும் வாய்ப்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.