பீகாரில் நிதிஷ்குமாரின் ஜேடியூ கதை முடிகிறது? 17 எம்.எல்.ஏக்கள் ஆர்ஜேடிக்கு கூண்டோடு தாவ முடிவு?
பாட்னா: பீகாரில் நிதிஷ்குமாரின் ஜேடியூவை சேர்ந்த 17 எம்.எல்.ஏக்கள் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சிக்கு தாவ திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் ஜேடியூவு 7 எம்.எல்.ஏக்களுடன் 2-வது பெரிய கட்சியாக இருந்தது. ஜேடியூவின் கூட்டணி கட்சியான பாஜக, 7 பேரில் 6 எம்.எல்.ஏக்களை கட்சி தாவ வைத்தது. இதனால் ஜேடியூ கடும் அதிருப்தி அடைந்துள்ளது,
பீகார் நிலவரம்
பீகாரில் 43 இடங்களில் வென்ற ஜேடியூவும் 74 இடங்களில் வென்ற பாஜகவும் இணைந்து நிதிஷ்குமாரை முதல்வராக கொண்டு கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றன. அருணாச்சல பிரதேசத்தில் பாஜக நடத்திய விளையாட்டு பீகாரில் எதிரொலிக்க தொடங்கிவிட்டது.
கவிழப் போகும் பாஜக அரசு
தமக்கு முதல்வர் பதவி தேவை இல்லை; பாஜகவே முதல்வராக ஒருவரை தேர்வு செய்யட்டும் என நிதிஷ்குமார் ஏற்கனவே அதிரடியாக அறிவித்துவிட்டார். இதனால் ஜேடியூ-பாஜக கூட்டணி ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும் நிலை உள்ளது.
கட்சி தாவும் ஜேடியூ 17 எம்.எல்.ஏக்கள்
இந்த நிலையில் ஜேடியூ கட்சியின் 17 எம்.எல்.ஏக்கள் ஆர்ஜேடி கட்சிக்கு தாவ திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பாஜகவுடனான கூட்டணியை ஜேடியூ முறித்து கொண்டால் அம்மாநிலத்தில் ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகள்- ஜேடியூ இணைந்து மீண்டும் புதிய கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது.
பீகாரில் பரபரப்பு
இதனால் இப்போதே கட்சி தாவும் மும்முரத்தில் ஜேடியூ எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஜேடியூ எம்.எல்.ஏக்களின் இந்த முடிவு பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.