பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு
பாட்னா: பீகார் மாநிலத்தில் கடும் வெயிலைத் தாங்க முடியாமல் பலியானவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.
அவுரங்காபாத்தில் இன்று வரை 47 பேர் இறந்துள்ளனர், கயாவில் 32 பேரும், நவாடாவில் வெப்ப தாக்கத்தால் 12 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், 44 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
பருவநிலை மாற்றத்தால், ஆண்டுக்கு ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. நாட்டின் பல மாநிலங்களில் வெயில் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். வெயில் கொடுமையால் பகல் நேரங்களில், வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் உள்ளது. அதே சமயம், வீட்டிற்குள் இருக்கவே முடியாத அளவிற்கு புழுக்கம் மக்களை வாட்டுகிறது.கூடவே, தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது.
இந்தநிலையில், பீகார் மாநிலம் கயாவில் கடும் வெயிலைத் தாங்க முடியாமல் இதுவரை 91 பேர் உயிரிழந்துள்ளனர். அனல் காற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அரசு மருத்துவமனைகளில் சிலர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்கள் அனைவருக்கும் , உடல்சூட்டால் காய்ச்சல் அதிகளவு இருந்ததாக அவுரங்காபாத் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், வெயிலுக்கு பலியானோர் குடும்பத்தினருக்கு மாநில அரசு சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, பீகாரில் மூளை காய்ச்சலுக்கு பலி எண்ணிக்கை 100 பேருக்கும் மேலாக உயர்ந்துள்ளது. இந்த நோயானது மூளையின் செயல்பாட்டை தாக்கி குழப்பம், கோமா, வலிப்பு உள்ளிட்டவைகளை ஏற்படுத்தும் ஒருவித காய்ச்சல் ஆகும். மூளை காய்ச்சல், வெப்பத்தின் தாக்கத்தால், பீகார் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.