பீகார் தேர்தல் களத்தில் காணாமல் போன சுஷாந்த்சிங் மரணத்துக்கு நீதி கோரும் முழக்கம்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் களத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண விவகாரம் குறித்து யாருமே பேசாமல் கடந்து செல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
பீகாரைச் சேர்ந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் மரணம் அடைந்தார். சுஷாந்த் மரணம் குறித்து பீகார் அரசு பல்வேறு சந்தேகங்களை கிளப்பியது. இதனால் பீகார் அரசுக்கும் மகாராஷ்டிரா அரசுக்கும் மோதல் வெடித்தது.
சுஷாந்த்சிங் வழக்கு- சிபிஐ விசாரணை
இரு அரசுகளும் மாறி மாறி குற்றம்சாட்டின. ஒருகட்டத்தில் மகாராஷ்டிராவுக்கு நெருக்கடி தரும் வகையில் சுஷாந்த்சிங் மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது பீகார். இப்போது சுஷாந்த் வழக்கை சிபிஐ விசாரித்தும் வருகிறது.
பீகார் தேர்தலில்..
சுஷாந்த் சிங்கின் மரண வழக்கு பீகாரில் தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் என கூறப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் சுஷாந்த் சிங் மரணம் குறித்து யாருமே பேசவில்லை. இத்தனைக்கும் சுஷாந்த்சிங்கின் உறவினர் நீரஜ்குமார் பப்லு பாஜக வேட்பாளராக இருக்கிறார்.
உள்ளூர் பிரச்சனை
நீரஜ்குமாரும் அவரது ஆதரவாளர்களும் கூட சுஷாந்த் சிங் மரணத்தைப் பற்றி எதுவுமே பேசவில்லை. பீகார் களத்தைப் பொறுத்தவரை உள்ளூர் பிரச்சனைகளைப் பேசவே நிறைய இருக்கிறது என்கிற அளவில்தான் போக்கு இருக்கிறது.
தற்கொலைதான் என முடிவு
சுஷாந்த்சிங் தற்கொலைதான் செய்து கொண்டார் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை உறுதிப்படுத்தியது. இதனால்கூட இந்த பிரச்சனையை தொடராமல் இருக்கலாம் என பீகார் தலைவர்கள் முடிவெடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.