பீகார் தேர்தல் களத்தில் திடீர் பரபரப்பு- சிராக் பாஸ்வானுடன் நிதிஷ்குமார் சந்திப்பு!
பாட்னா: பீகார் தேர்தல் களத்தில் புதிய திருப்பமாக லோக் ஜனசக்தி (எல்ஜேபி) தலைவர் சிராக் பாஸ்வானை ஜேடியூ தலைவரும் முதல்வருமான நிதிஷ்குமார் இன்று சந்தித்தார்.
பீகார் சட்டசபை தேர்தலில் ஜேடியூ-பாஜக கூட்டணியில் இருந்து எல்ஜேபி விலகி உள்ளது. ஜேடியூவை வீழ்த்துவதற்காகவே அந்த கட்சிக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது எல்ஜேபி.
சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் பாஜக-எல்ஜேபி ஆட்சிதான் அமையும் என கூறி வருகிறார் சிராக் பாஸ்வான். இந்த நிலையில் சிராக் பாஸ்வானின் தந்தை ராம்விலாஸ் பாஸ்வான் உடல்நலக் குறைவால் காலமானார்.
பீகார் சட்டசபை தேர்தல் 2020: அப்பா ராம்விலாஸ் பஸ்வான் இழப்பை ஈடு செய்வாரா சிராக் பஸ்வான்
அனுதாப அலை- ஜேடியூவுக்கு சிக்கல்
பாஸ்வான் மறைவால் கணிசமான அனுதாப அலை எல்ஜேபிக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் ஜேடியூவின் வெற்றி பாதிக்கும் என்பது பொதுவான கணிப்பு. இதனால் எல்ஜேபிக்கு கடிவாளம் போடுங்கள் என பாஜகவுக்கும் ஜேடியூ நெருக்கடி கொடுத்து வருகிறது.
ஆர்ஜேடி-எல்ஜேபி பேச்சுவார்த்தை
இந்நிலையில் எல்ஜேபியும் ஆர்ஜேடியும் கூட்டணி அமைக்க சாத்தியம் இருக்கிறது; இதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன என்கிற தகவல்கள் வெளியாகின. ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன. இந்த அணியில் எல்ஜேபி இணைந்தால் பாஜக-ஜேடியூவுக்கு பெரும் சவாலாக இருக்கும்.
பாஸ்வான் மறைவுக்கான சடங்குகள்
இதனிடையே ராம்விலாஸ் பாஸ்வான் மறைவை முன்னிட்டு நடத்தப்படும் சடங்குகளில் பங்கேற்க ஆர்ஜேடி நிறுவனரான லாலுபிரசாத் யாதவ் குடும்பத்தினருக்கு பாஸ்வான் குடும்பத்தினர் நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தனர். இந்த சடங்குகள் இன்று பாட்னாவில் எல்ஜேபி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
சிராக் பாஸ்வானுடன் நிதிஷ் திடீர் சந்திப்பு
அப்போது யாரும் எதிர்பாரதவிதமாக ஜேடியூ தலைவரும் முதல்வருமான நிதிஷ்குமார் இதில் பங்கேற்றார். அப்போது சிராக் பாஸ்வானை சந்தித்து நிதிஷ்குமார் பேசினார். அரசியல் நாகரிகம் கருதியதாக இந்த சந்திப்பு கருதப்பட்டாலும் தேர்தல் நடைபெறும் சூழ்நிலை என்பதால் மிகவும் முக்கியமானதாகவும் கருதப்படுகிறது.