பீகார் சட்டசபை தேர்தல் 2020: அப்பா ராம்விலாஸ் பஸ்வான் இழப்பை ஈடு செய்வாரா சிராக் பஸ்வான்
ராம்விலாஸ் பஸ்வானின் இழப்பு லோக் ஜன சக்தி கட்சி தொண்டர்கள் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது மகன் சிராக் பஸ்வான் தனது வலிமையை நிரூபித்து வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந
பாட்னா: பீகாரில் தலித் சமுதாய மக்களின் தலைவனாக திகழ்ந்த ராம்விலாஸ் பஸ்வானின் மரணம் லோக் ஜன சக்தி கட்சியில் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளதாக தொண்டர்கள் கருதும் நிலையில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தனது பலத்தை நிரூபித்து கட்சியின் உண்மையான வாரிசு என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சிராக். தன் முன்னால் உள்ள சோதனையை சாதனையாக மாற்றி தலித் சமூகத்தின் வாக்கு வங்கியை தக்கவைப்பாரா சிராக் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தத் தருணத்தில், பீகார் சட்டசபைக்கு தேர்தல் வரும் 28ஆம் தேதி, நவம்பர் 3, மற்றும் 7ஆம் தேதி என 3 கட்டங்களாக நடைபெற உள்ளது..
முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற 71 தொகுதிகளில், கடந்த 1 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 8ஆம் தேதி முடிந்துள்ளது. 2ஆம் கட்ட தேர்தலை சந்திக்கும் 94 தொகுதிகளில் 9 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.
இந்த சட்டசபை தேர்தலை முன்னாள் முதல்வர், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமா லாலுபிரசாத் இன்றி, பீகார் சந்திக்கிறது. அவரது மகன் தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளரா முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த தேர்தலில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதாதளம் - பா.ஜ.க கூட்டணியை எதிர்த்து ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தலைமையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட், வி.ஐ.பி., ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் கொண்ட மெகா கூட்டணி அமைந்துள்ளது
லோக் ஜன சக்தி கட்சியின் மூத்த தலைவர் ராம் விலாஸ் பஸ்வானின் திடீர் மரணம் அந்த கட்சியின் தொண்டர்களை சோர்வடைய செய்துள்ளது. ராம் விலாஸ் பஸ்வான் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டுதான் கடந்த 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போதே தனது மகன் சிராக் பஸ்வானை முன்னிலைப்படுத்தினார். என்ன நினைத்து அவர் தனது மகனை முன்னிலைப்படுத்தினாலே பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாகவே மரணமடைந்து விட்டார்.
லோக் ஜன சக்தி இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து விலகி களம் காண்கிறது. லோக் ஜன சக்தியின் முதல்வர் வேட்பாளர் சிராக் பாஸ்வான். இப்போது அத்தனை பேரின் கவனத்தையும் கவர்ந்துள்ளார். மக்கள் அவரைத்தான் அதிகமாக கூர்ந்து கவனிக்கின்றனர். சிராக் என்ன செய்யப் போகிறார்.. அப்பாவின் இழப்பை எப்படி ஈடு கட்டப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகமாகவே இருக்கிறது.
பீகார் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் சிராக் பஸ்வான் மீதுதான் அதிக கவனம் உள்ளது. முதல்வர் நிதிஷ்குமாரை எதிர்த்து களம் காணும் சிராக் பஸ்வான் மக்களின் மனதை சம்பாதிப்பாரா என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு.
சிராக் பஸ்வானின் அரசியல் களமாடும் திறன் பற்றி கணித்துள்ள அரசியல் ஆய்வாளார் டி.எம் திவாகர், பீகார் அரசியல் சூழ்நிலையை சிராக் இன்னும் நன்றாக கற்க வேண்டும் என்கிறார். அவரது தந்தை ராம்விலாஸ் பஸ்வான் தனது சமூக மக்களிடம் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் கவரும் திறமை பெற்றிருந்தார். அவரது சமூக அரசியல் திறமை, செல்வாக்கு போன்றவை பிரம்மாண்டமானது. அந்த செல்வாக்கின் பின்னணியில் தற்போது அரசியல் செய்து வரும் சிராக் எப்படி பயன்படுத்தப்போகிறார் என்பதை இந்த தேர்தல் சொல்லிவிடும் என்கிறார் திவாகர். எது எப்படியோ சிராக்கின் தந்தை நல்ல அரசியல் களத்தை அறிமுகம் செய்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார் திவாகர்.
ராம் விலாஸ் பஸ்வான் என்ற மிகப்பெரிய தூண் சாய்ந்து விட்டது. இது அந்த கட்சியின் அஸ்திவாரத்தையே அசைத்து விடும் என்கிறார் பீகார் மாநில பாஜக தலைவர் சஞ்ஜய் பஸ்வான். மறைந்த தலைவர் மக்களின் நன்மதிப்பை பெற்றவர். சிராக் பஸ்வான் தந்தையின் புகழ் வெளிச்சத்தில் இருப்பதால் அவர் கட்சிக்கு வெற்றியை தேடி தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இது மிகப்பெரிய சவால்தான் என்கிறார் சஞ்சய் பஸ்வான்.
களைகட்டுகிறது பீகார் சட்டசபை தேர்தல்.. இன்று பிரச்சார களம் வருகிறார் நிதிஷ் குமார்
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் ஷியாம் ராஜக், ராம் விலாஸ் பஸ்வான் தேசிய அரசியலில் தனது அடையாளத்தை வெளிப்படுத்தினார், சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமிருந்தும் அவருக்கு மரியாதை கிடைத்திருக்கிறது. பல தலித் இயக்கங்களில் அவருடன் நெருக்கமாக பணியாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவர் மனதிலும் அணுகுமுறையிலும் தெளிவாக இருந்தார். அவருக்குப் பிறகு, பீகார் அரசியலில் ஒரு வெற்றிடம் இருப்பதாகவே தோன்றுகிறது என்று கூறியுள்ளார் ஷியாம் ராஜக்.
தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு கட்சியில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பி பீகார் அரசியலில் வெற்றிக்கொடி நாட்டுவாரா சிராக் பஸ்வான் என்று இப்போதே எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர் தொண்டர்கள்.