பீகார் சட்டசபைத் தேர்தல்... முந்திக்கொண்ட காங்கிரஸ் ஆர்ஜேடி... தொகுதிகள் பங்கீடு முடிந்தது!!
பாட்னா: எதிர்கொண்டிருக்கும் பீகார் மாநில சட்டசபைத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஏறக்குறைய தொகுதி பங்கீடுகளை முடித்துக் கொண்டு இருப்பதாக தவகல் வெளியாகியுள்ளது. இதன்படி, ராஷ்டிரிய ஜனதா தளம் 163 தொகுதிகளிலும், காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று தெரிய வந்துள்ளது.
பீகார் சட்டசபை மொத்தம் 243 உறுப்பினர்களைக் கொண்டது. நடப்பு சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 27 உறுப்பினர்களும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு 81 உறுப்பினர்களும் உள்ளனர். ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு தற்போது ஒதுக்கப்பட்டு இருக்கும் 163 இடங்களில் விகாஷில் இன்சான் கட்சி, சிபிஐ எம்எல் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றுக்கு பகிர்ந்து கொடுக்கும் என்று தெரியவந்துள்ளது. அதேசமயம் இந்துஸ்தான் அவாம் கட்சி, ராஷ்டிரிய லோக் சமட்டா கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி விட்டுக்கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
பீகார் தேர்தல் பொறுப்பாளராக சக்தி கோஹிலை காங்கிரஸ் மேலிடம் நியமனம் செய்துள்ளது. இதுகுறித்து சக்தி கூறுகையில், ''எங்களது கூட்டணியில் அதிக கட்சிகள் உள்ளன. காங்கிரஸ் 80 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எந்தெந்தத தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இதுகுறித்து காங்கிரஸ் கட்சிசியின் மூத்த தலைவர்கள் பேசி வருகின்றனர்'' என்று தெரிவித்துள்ளனர்.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கூறுகையில், ''இடது சாரி கட்சிகளை எங்களது கூட்டணியுடன் இணைத்துக் கொள்வது குறித்து பேசி வருகிறோம். காங்கிரஸ் கட்சியுடன் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்'' என்று தெரிவித்துள்ளனர்.
ஒரு பேஸ்புக் போஸ்ட்.. பெங்களூரில் சூறையாடப்பட்ட எம்எல்ஏ வீடு.. 3 பேர் பலி.. பரபரப்பு.. என்ன நடந்தது?
தொகுதிப் பங்கீடுகள் குறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் செய்தி தொடர்பாளர் மிருத்யுஞ்செய் திவாரி கூறுகையில், ''இப்போதே தொகுதிகள் பங்கீடு குறித்து கூற முடியாது. நாங்கள்தான் இந்தக் கூட்டணியில் பெரிய கட்சியாக இடம் பெற்றுள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் தற்போது ஆட்சியில் இருக்கிறது. இந்தக் கட்சியின் சார்பில் நிதிஷ் குமார்முதல்வராக இருந்து வருகிறார். என்டிஏவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறார். இவரது ஆட்சியின் மீது ஊழல், கொரோனா மற்றும் வெள்ளம் ஏற்பட்டபோது திறம்பட செயல்படாதது, வேலை வாய்ப்பு இழப்பு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது என்று ஏகபட்ட குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்படுகின்றன. இதனால், கூட்டணியில் இருக்கும் பாஜக இந்த முறை நிதிஷ் குமாரை கழற்றி விட்டு விடலாம் என்று யோசித்து வருகிறது. லோக் ஜனசக்தியுடன் கூட்டணி அமைத்து அதிக இடங்களில் போட்டியிடலாம் என்று பாஜக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.