பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னண்ணே இது.. ஒரே கூட்டமா இருக்கு.. ஒ.. "முதல்வர் வேட்பாளர்களா".. எம்பூட்டு பேரு!

Google Oneindia Tamil News

பாட்னா: முதல்வர் வேட்பாளர்கள் என்றாலே கலகல சண்டைதான்.. தர்ம யுத்தங்கள்தான்.. சரமாரி வாய் பேச்சுக்கள்தான்.. கோபங்கள் தான்.. வெளிநடப்புகள்தான்.. ஆவேசங்கள்தான்... ஆத்தா சத்தியமா தமிழ்நாட்டைச் சொல்லலைங்க.. பீகாரைப் பத்தி சொல்றோம்.!

திரும்பிய பக்கமெல்லாம் நாராயணனா தெரியுதும்பாங்க.. ஆனால் பீகாருக்குப் போனீங்கன்னா.. திரும்பிய திசையெல்லாம் முதல்வர் வேட்பாளர்கள்தான். அந்த அளவுக்கு கடும் போட்டி நிலவுகிறது. ஏகப்பட்ட கட்சிகள், ஸோ, களேபரக் கட்சிகளும் அதிகம்.

பீகாரில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு அக்டோபர் 28ம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தம் 71 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கலும் முடிந்து விட்டது.

குழப்பத்தில் வாக்காளர்கள்

குழப்பத்தில் வாக்காளர்கள்

இதுவரை இல்லாத அளவுக்கு பீகார் வாக்காளர்கள் இந்த முறை குழம்பிப் புலம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வேட்பாளர்களைப் பற்றிக் கூட அவர்களுக்குக் கவலை இல்லை. ஆனால் முதல்வர் வேட்பாளர்கள்தான் வாக்காளர்களை ரொம்பவே குழப்பியடிக்கின்றனர். காரணம் இதுவரை இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட முதல்வர் வேட்பாளர்கள் உருவெடுத்துள்ளனர் பீகார் தேர்தலில்.

புதுத் தலைவர் சிராக்

புதுத் தலைவர் சிராக்

இந்த முறை தேர்தலில் சர்ப்பிரைஸ் தலைவர் யார் என்றால் அது சிராக் பாஸ்வான்தான். அவர்தான் இப்போது அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்துப் பிடித்து வைத்துள்ளார். மக்கள் அவரைத்தான் அதிகமாக கூர்ந்து கவனிக்கின்றனர். சிராக் என்ன செய்யப் போகிறார்.. அப்பாவின் இழப்பை எப்படி ஈடு கட்டப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் பலமாகவே இருக்கிறது. பீகார் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் அவர் மீதுதான் அதிக கவனம் உள்ளது.

கூட்டணிகள் அதிகம்

கூட்டணிகள் அதிகம்

இந்த முறை அதிக அளவிலான கூட்டணிகளும் தேர்தலை சந்திக்கின்றன. ஒவ்வொரு கூட்டணிக்கும் ஒரு முதல்வர் வேட்பாளர் வேறு. எனவே வாக்காளர்களுக்கு, அடுத்த முதல்வர் யார் என்ற குழப்பம் வந்து விட்டது. நிதீஷ் குமார் மறுபடியும் முதல்வராவாரா என்ற கேள்வியும் ஓங்கி ஒலிக்கிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் என்ன மாதிரியான மன நிலையுடன் வாக்காளர்கள் வாக்களிக்கப் போகிறார்களோ அதுவே அடுத்த 2 கட்டங்களிலும் கூட எதிரொலிக்கும் என்று நம்பப்படுகிறது.

2 தான் பெரிய கூட்டணிகள்

2 தான் பெரிய கூட்டணிகள்

பீகார் சட்டசபைத் தேர்தலில் 2 கூட்டணிகள்தான் மிகப் பெரியவை. ஒன்று தேசிய ஜனநாயக கூட்டணி. இதன் முதல்வர் வேட்பாளர் நிதீஷ் குமார். இதில் நான்கு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஐக்கிய ஜனதாதளம், பாஜக, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் விகாஷீல் இன்சான் கட்சி. மறுபக்கம் மகாகத்பந்தன் கூட்டணி. மகாகத்பந்தன் என்பது லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகியவை இணைந்த மெகா கூட்டணி. இதன் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி பிரசாத் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் லாலு பிரசாத் யாதவின் மகன். இதுதவிர இன்னும் சில முக்கியக் கட்சிகளும் உள்ளன. அவற்றுக்கும் கொஞ்சம் போல வாக்கு வங்கிகள் உள்ளன.

நம்ம ஊர் ம.ந.கூ போல

நம்ம ஊர் ம.ந.கூ போல

ஏஐஎம்ஐஎம் கட்சி எம்பியான அசாதுதீன் ஓவைசி, ராஷ்டிரிய லோக் சமதா கட்சியுடன் கை கோர்த்து கூட்டணி அமைத்துள்ளார். சமதா கட்சியின் தலைவராக இருப்பவர் உபேந்திர குஷ்வாஹா. இக்கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சி, ஜன்வாதி சோசலிச கட்சி ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. இவர்கள் இணைந்து மாபெரும் ஜனநாயக மதச்சார்பற்ற கூட்டணி என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளன. கிட்டத்தட்ட நம்ம ஊர் "ம.ந.கூ" போல இது உருவாகியுள்ளது. இதன் முதல்வர் வேட்பாளர் குஷ்வாஹா.

4வது கூட்டணி .. முஜகூ!

4வது கூட்டணி .. முஜகூ!

இத்தோடு முடியவில்லை.. ஜன் அதிகார் கட்சி தலைவர் பப்பு யாதவ் தலைமையில் ஒரு கூட்டணி உள்ளது. அதன் பெயர் "மு.ஜ.கூ".. .அதாவது முற்போக்கு ஜனநாயகக் கூட்டணி. இந்தக் கூட்டணிக்கும், பகுஜன் சமாஜ் கூட்டணிக்கும் பெரிய அளவில் இங்கு செல்வாக்கு இருப்பதாக தெரியவில்லை. காரணம் இவர்களுக்கு தற்போதைய சட்டசபையில் எந்த பிரதிநிதித்துவமும் இல்லை. இக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பப்பு யாதவ். இருப்பினும் மேற்கண்ட கூட்டணிகளைத் தாண்டி அதிக கவனம் ஈர்த்திருப்பது லோக் ஜன சக்தி கட்சிதான்.

பாஸ்வான் மகன் சிராக்

பாஸ்வான் மகன் சிராக்

ராம் விலாஸ் பாஸ்வானின் இந்தக் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி விட்டது. அதேசமயம், பாகவுடன் கூட்டணி வைத்துள்ளது. அதேசமயம், இந்தத் தேர்தலில் யாருடனும் கூட்டணியும் வைக்கவில்லை. மாறாக பாஜகவைத் தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு எதிராக களம் காண்கிறது. முதல் கட்ட தேர்தலில் இக்கட்சி 42 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இங்கு பாஜக போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிதீஷுக்கு ஆப்பு வருமா

நிதீஷுக்கு ஆப்பு வருமா

லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான்தான் முதல்வர் வேட்பாளராக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை வைத்து நிதீஷ் குமாருக்கு ஆப்பு வைக்க பாஜக உள்ளடி வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக ஏற்கனவே பேச்சு ஓடிக் கொண்டுள்ளது. ஒரு வேளை தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றால், ஐக்கிய ஜனதாதளத்தை உடைத்து சிராக்கை முதல்வராக்கி பாஜக பெரிய டிராமா போடும் வாய்ப்பையும் மறுப்பதற்கில்லை. எனவே நிதீஷுக்குத்தான் தற்போது சவால்கள் அதிகம் உள்ளன.

ஆக மொத்தத்தில் பீகார் சட்டசபைத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது. எனவேதான் நாட்டின் மொத்த கவனமும் பீகார் மீது விழுந்துள்ளது.

English summary
In Bihar Assembly election 2020, too many CM candidates are there to confuse Bihar voters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X