எப்படியெல்லாம் எதிர்த்தார்.. இப்போ பாருங்க.. மோடி மட்டுமே காப்பாற்ற முடியும்- சரணடைந்த நிதிஷ் குமார்
பாட்னா: அதிகபட்சம் இல்லை.. பத்து வருடங்களுக்கு முன்பு நரேந்திர மோடியை தேர்தல் பிரச்சாரம் செய்ய விட அனுமதிக்காத அதே நிதிஷ்குமார், இப்போது நரேந்திர மோடி பிரச்சாரத்தால்தான் தன்னால் மீண்டும் முதல்வராக முடியும் என்று உறுதியாக நம்பி அவரை சார்ந்து இருக்கிறார்.
பீஹாரில் மூன்று கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 71 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், 2-ம் கட்ட தேர்தல் காத்திருக்கிறது.
பாஜக-நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை ஒரு அணியாகவும், ராஷ்டிரிய ஜனதா தளம்-காங்கிரஸ்-இடதுசாரிகள் மற்றொரு அணியாகவும் களமிறங்குகின்றன. ராம்விலாஸ் பாஸ்வானின், மகன் சிராஜ் குமார் தனி அணியாக போட்டியிடுகிறார்.
10 வருடம்தான் ஆச்சு
இப்போது ஒரு குட்டி பிளாஷ்பேக் போய் வரலாம். அது 2010ஆம் ஆண்டு. பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இருந்த காலகட்டம். அப்போது பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. பாஜக, தங்களது பிரச்சார பீரங்கிகளை தேர்தல் பிரச்சாரத்துக்கு அனுப்ப தயாரானது. ஆனால், நரேந்திர மோடி பீகார் மண்ணில் பிரச்சாரம் செய்ய வரவே கூடாது என்று பிடிவாதம் பிடித்தார் நிதிஷ்குமார்.
மோடி-நிதிஷ் ஒரே மேடையில்
பிராந்திய அளவிலான கட்சிகளின் கூட்டணி அப்போது பாஜகவுக்கு ரொம்ப அவசியம் பட்டதால் நிதிஷ்குமார் நிபந்தனையை ஏற்று பாஜக தலைமை நரேந்திரமோடியை பீகாருக்கு அனுப்பவில்லை. அதற்கு முந்தைய ஆண்டு, லோக்சபா தேர்தலின்போது, அத்வானியை பாஜக பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியது. அப்போது 2009 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடைபெற்ற பாஜக கூட்டணியின் பிரச்சார கூட்டத்தின்போது ஒரே மேடையில் நிதீஷ் குமாருடன் நரேந்திர மோடியும் பிரச்சாரத்திற்கு வரவேண்டியதாயிற்று. அப்போது அருகே இருந்த நிதிஷ்குமாரின் கைகளை மோடி பிடித்து தூக்கி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்திருந்தார். பீகார் தேர்தலின்போது உள்ளூர் பத்திரிகைகளில் குஜராத்தை சேர்ந்த ஒரு விளம்பர ஏஜென்சி இந்த புகைப்படத்தை வெளியிட்டு பாஜகவுக்கு ஆதரவாக விளம்பரம் செய்திருந்தது. இதற்கு கடும் கோபம் கொண்டார் நிதிஷ்குமார்.
போலீஸ் ரெய்டு
பீகார் காவல்துறையினர் குஜராத் சென்று அந்த விளம்பர ஏஜென்சியில் அலுவலகத்தில் ரெய்டு நடத்தினர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அது மட்டுமா, 2008 ஆம் ஆண்டு கோசி நதி வெள்ளப் பெருக்கு காரணமாக பீகார் சிரமத்தை சந்தித்தபோது குஜராத் மாநில அரசு வழங்கிய 5 கோடி ரூபாயை திரும்பவும் கொடுத்தார் என்றால் நிதிஷ்குமார் எவ்வளவு ஆவேசம் காட்டினார் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
மோடியால் கூட்டணியை முறித்தார்
அந்த தேர்தலின்போது ஐக்கிய ஜனதா தளம் 115 தொகுதிகளிலும் பாஜக 91 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டார் நிதிஷ்குமார். அதற்கு அவர் கூறிய காரணம், பாஜக அதன் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிறுத்த ஆரம்பிக்கிறது என்பது தான். அப்போது சிவசேனா மற்றும் சிரோன் மணி அகாலிதளம் ஆகிய இரு கட்சிகள் மட்டுமே பாஜக கூட்டணியில் இருந்தன. ஆனால் நரேந்திர மோடி அலை காரணமாக 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக கூட்டணி.
டிஎன்ஏ சோதனை
2015ஆம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலின்போது நரேந்திர மோடி மற்றும் நிதிஷ்குமார் இருவரும் கடும் எதிரிகளை போல மோதிக் கொண்டனர். நிதிஷ்குமாரின் மரபணுவில் ஏதோ தவறு இருக்கிறது என்று குறிப்பிட்டு விமர்சனம் செய்தார் மோடி. அடிக்கடி கூட்டணியை மாற்றிக்கொண்டே இருக்கிறார் என்பதை குறிப்பிட இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆனால் இதை பீகார் மாநில மக்களுக்கு இழைத்த அவமரியாதையாக மாற்றி பிரச்சாரம் செய்தார் நிதிஷ்குமார். சுமார் 50 லட்சம் ஐக்கிய ஜனதாதளம் தொண்டர்கள் மரபணு பரிசோதனைக்காக தங்கள் ரத்தத்தை அனுப்பி வைத்தனர் என்றால் அது எந்த அளவுக்கு விபரீதமாக சென்றது என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். இந்த மரபணு பிரச்சாரத்தை மூலதனமாக்கி கொண்டும் லாலு பிரசாத் யாதவ் கட்சியுடனான கூட்டணியை துணையோடும் மறுபடியும் முதல்வரானார் நிதிஷ்குமார். அந்த தேர்தலில் 71 தொகுதிகளில் ஐக்கிய ஜனதாதளம் என்றது, 82 தொகுதிகளை ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளது.
முதல்வர் பதவிதான் ஒரே இலக்கு
2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது மோடிக்கு எதிராக பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சிக் கூட்டணியால் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிதிஷ்குமார் மறுபடியும் அணி தாவினார். 2017 ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு முதல்வராக தொடர ஆரம்பித்துவிட்டார். முதல்வர் பதவி என்ற ஒற்றை இலக்கு வேறு எதைப்பற்றியும் நிதிஷ் குமாரை யோசிக்க விடாமல் செய்து வருகிறது. அதற்கு இந்த கூட்டணி தாவல்களும் இப்போது நரேந்திர மோடியுடன் அவர் உறவு பாராட்டுவதும் உதாரணமாகும்.
மோடியை நம்பி நிதிஷ் குமார்
நிதிஷ் குமார் தான், தங்கள் முதல் எதிரி என்று லாலு பிரசாத் யாதவ் மகனும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முதல்வர் வேட்பாளருமான, தேஜஸ்வி யாதவ் சிராக் பாஸ்வான், இருவரும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இரு முனைத் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாமல் திணறி வருகிறார் நிதிஷ் குமார். 15 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்ததால் இயல்பாக அவர் மீது மக்களுக்கு எதிர்ப்பு அலை இருக்கிறது. ஆனால் பாஜக மற்றும் மோடி மீது எதிர்ப்பு அலை இல்லை. இதை பயன்படுத்துவதற்கு மோடி பிரச்சாரத்தை பெரிதும் நம்பியிருக்கிறார் நிதிஷ் குமார். மோடியின் பிரச்சாரம் தான் தன்னை மீண்டும் முதல்வர் பதவியில் அமர வைக்கும் என்று நம்புகிறார் நிதிஷ்குமார். உறுதியான கொள்கை கொண்ட தலைவர் என்ற பெயரை அவர் இழந்துவிட்டதால் முழுக்க முழுக்க பாஜக செல்வாக்கு மற்றும் மோடியின் பிரச்சாரம் ஆகிய இரண்டும் தான் அவர் நம்பி இருக்கக்கூடிய ஆயுதங்களாக இருக்கிறது.