பீகாரில் தேர்தல்...ஒதுங்கிய நிதிஷ்...ராமர் கோயிலுக்கு வாழ்த்து இல்லை...இதுதான் காரணம்!!
பாட்னா: அயோத்தியில் நேற்று ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு முதல் செங்கல்லை எடுத்துக் கொடுத்தார். இந்த நிகழ்வுக்கு காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் வாழ்த்து தெரிவித்து இருந்தன. ஆனால், பாஜக கூட்டணியில் இருக்கும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மவுனம் காத்தார்.
பீகாரில் நடப்பாண்டில் சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. தற்போது பாஜக, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி ஆகியவை கூட்டணியில் உள்ளன. வரும் தேர்தலில் இந்த கட்சிகள் அனைத்தும் இணைந்து தேர்தலை சந்திக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், நேற்று அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் கலந்து கொண்டு இருந்தபோது, நிதிஷ் குமார் ஹெலிகாப்டரில் தர்பாங்காவுக்கு பறந்து கொண்டு இருந்தார்.
ராஜ்யசபா எம்.பி.யாகி மத்திய அமைச்சராக காத்திருந்த மனோஜ் சின்ஹா.. திடீரென காஷ்மீர் ஆளுநராக நியமனம்!
தர்பாங்கா
அங்கு நடந்த சமூக உணவுக் கூடம் மற்றும் நிவாரண முகாம்களில் கலந்து கொண்டார். கொரோனா தொற்று பரவல் மற்றும் வெள்ளம் ஏற்பட்ட பின்னர் மாநிலத்தில் எந்தவித பயணத்தையும் முதல்வர் நிதிஷ் மேற்கொண்டு ஆறுதல் கூறவில்லை என்ற விமர்சனம் எழுந்து வந்தது. இந்த நிலையில் பாட்னாவில் இருந்து முதன் முறையாக நேற்று தர்பாங்கா சென்று இருந்தார்.
சுஷாந்த் சிங் ராஜ்புட்
அந்த சமயத்தில் அயோத்தியில் நடந்து கொண்டிருந்த பூமி பூஜைக்கு நிதிஷ் வாழ்த்து கூறவில்லை. இதுகுறித்து சமூக ஊடகங்களில் எந்தப் பதிவையும் இடவில்லை. ஆனால், நேற்று ட்விட்டரில் நான்கு பதிவுகளை நிதிஷ் குமார் இட்டு இருந்தார். அதில் ஒன்று, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மோடி அரசு பரிந்துரை செய்து இருந்ததற்கு நன்றி தெரிவித்து இருந்தார். மற்ற ட்வீட்கள் அந்த மாநிலத்தில் வெள்ளத்தின்போது ஏற்பட்ட நிகழ்வுகளைப் பற்றி மட்டுமே பதிவு செய்து இருந்தார்.
சஞ்சய் குமார் ஜா
ஆனால், சீதை பிறந்ததாக கூறப்படும் பீகாரில் இருக்கும் மிதிலை என்ற இடத்தை குறித்து நீர்த்துறை அமைச்சர் சஞ்சய் குமார் ஜா பதிவை வெளியிட்டு இருந்தார். அவரது பதிவில், ''மிதிலையில் இருக்கும் ஒவ்வொருவர் இதயத்திலும் ராமர், சீதை குடிகொண்டு இருக்கின்றனர்'' என்று குறிப்பிட்டு இருந்தார். மற்ற மூத்த தலைவர்கள் யாரும் எந்தவித அறிக்கையும் வெளியிடவில்லை. ஆனால், சஞ்சய் குமார் ஜாவின் கருத்தை கட்சியின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது என்று மற்றொரு அமைச்சர் ஷ்யாம் ரஜக் கருத்து தெரிவித்துள்ளார்.
லாலு பிரசாத் யாதவ்
பீகாருக்குள் அத்வானியின் ரத யாத்திரை நுழைந்தபோது, அவரை கைது செய்யும்மாறு 1990ஆம் ஆண்டு முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அப்போதில் இருந்தே பீகார் மாநிலத்தில் இருக்கும் முஸ்லிம்கள் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனார்.
முஸ்லிம்கள் வாக்கு
கால் நடை ஊழல் வழக்கில் ஆட்சியை லாலு பறிகொடுத்தார். ஆட்சியை நிதிஷ் கைப்பற்றினர். அப்போது இருந்து முஸ்லிம்களின் வாக்குகளை வாங்குவதற்கு நிதிஷ் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். 2010ஆம் ஆண்டில் பாஜகவுடன் நிதிஷ் கூட்டணி அமைத்தார். இதனால் முஸ்லிம்களின் வாக்குகளை இழந்தார். இதையடுத்து 2013ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து வெளியேறினார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டார். ஆனாலும், அப்போது நடந்த தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. மீண்டும் 2017ல் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ் இணைந்தார்.
நிதிஷ் மவுனம்
இதையடுத்தே மதச்சார்பற்ற கட்சி என்ற இமேஜை அவரால் நிலை நிறுத்தி கொள்ள இயலவில்லை. இத்துடன் ஊழல், லஞ்சம் என்று இவரது ஆட்சியின் மீது குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து எழுப்பப்படுகிறது. இந்த நிலையில் இவருக்கு கடிவாளம் போட வேண்டும் என்று பாஜக நினைத்து வருகிறது. பாஜகவின் இமேஜில் இருந்து வெளியேற வேண்டும் என்று நிதிஷும் முயற்சிக்கிறார். தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயில் விஷயத்தில் நிதிஷ் மவுனம் காத்து இருக்கலாம் என்று பேசப்படுகிறது.
சிராக் பாஸ்வான்
இதற்கு முன்னதாக பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவு மேற்கொள்ளப்பட மாட்டாது என்று நிதிஷ் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் கூட்டணியில் நிதிஷ் குமாருக்கு செக் வைக்க வேண்டும் என்பதற்காக லோக் ஜன சக்தி தலைவர் சிராக் பாஸ்வானின் கொம்பை சீவிவிட பாஜக முயற்சித்து வருகிறது.