பீகார் தேர்தல்: மேலும் 35 வேட்பாளர்களை அறிவித்தது பாஜக! அக். 22ல் பிரதமர் மோடி பிரசாரம்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலுக்கான மேலும் 35 வேட்பாளர்களை பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. பீகார் சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி அக்டோபர் 22-ந் தேதி பிரசாரம் செய்வார் என கூறப்படுகிறது.
பீகார் சட்டசபை தேர்தல் அக்டோபர் 28-ந் தேதி முதல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. பாஜக- ஜேடியூ கூட்டணியில் ஜேடியூ 115 தொகுதிகளிலும் பாஜக 110 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
'முரளிதரன்' படத்தில் ஈழத் தமிழர போராட்டத்தை சிறுமைப்படுத்தும் காட்சிகள் இல்லை- தயாரிப்பாளர் விளக்கம்
பாஜகவின் 110 வேட்பாளர்கள்
இன்று இறுதி கட்டமாக 35 வேட்பாளர்களையும் பாஜக அறிவித்தது. இதையடுத்து 110 தொகுதிகளுக்குமான அனைத்து வேட்பாளர்களையும் பாஜக அறிவித்துவிட்டது. பாஜகவில் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காதவர்கள் பல தொகுதிகளில் அதிருப்தி வேட்பாளர்களாக வேட்பமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இவர்களை களை எடுக்கும் பணியில் பாஜக தீவிரமாக உள்ளது.
பிரதமர் மோடி பிரசாரம்
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி வரும் 22-ல் பீகார் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி ஆதரவு திரட்ட இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் படுதீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேஜஸ்வி விளாசல்
இந்நிலையில் சிறையில் உள்ள ஆர்ஜேடி தலைவர் லாலுபிரசாத்தின் மகன்களில் ஒருவரும் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், ஹாஜிபூர் தொகுதியில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், பீகாரில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 46.6% ஆக உள்ளது. வேலைவாய்ப்பின்மை, வறுமை, பசிக்கொடுமை, இடம்பெயர் தொழிலாளர் பிரச்சனை என பலவற்றுக்கும் தீர்வு காணப்படவில்லையே ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸில் சரத் யாதவ் மகள்
பீகார் தேர்தலில் புதிய பரபரப்பாக முதுபெரும் அரசியல் தலைவரும் லோக்தந்திரிக் ஜனதா தள் தலைவருமான சரத்யாதவின் மகள் இன்று காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானார். காங்கிரஸில் இன்று இணைந்த சுபாஷினி ராஜ் ராவ், இந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.