ரூட் கிளியர்.. நிதீஷ் குமார் தலைமையில்தான் பீகார் தேர்தலை சந்திப்போம்.. பாஜக அறிவிப்பு
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலை முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி சந்திக்கும் என்று பாஜக தேசிய தலைவர் நட்டா தெரிவித்துள்ளார். நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சிக்கும் இடையே கசப்புணர்வு இருந்து வரும் நிலையில் நட்டா இவ்வாறு அறிவித்து இருப்பது மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
நடப்பாண்டில் பீகார் சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதை முன்னிட்டு கூட்டணியில் இருக்கும் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடுகள் குறித்து பேசுவதற்காக இன்று பாட்னாவுக்கு நட்டா வந்துள்ளார். மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமாருக்கும், லோக்ஜனசக்தி கட்சியின் சிராக் பஸ்வானுக்கும் இடையே புகைச்சல் முற்றி வருகிறது. இதுகுறித்தும் பேசுவதற்காக இன்று நட்டா பாட்னா வந்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே நடிகர் சுஷாந்த் மரணம் குறித்து கூறி இருக்கும் பீகார் பாஜக தலைவர் சுஷில் மோடி, ''சுஷாந்த் மரணமும் அதைச் சுற்றி சென்று கொண்டு இருக்கும் விஷயங்கள் பீகார் தேர்தலை ஒருபோதும் பாதிக்காது'' என்று தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற நட்டா, ''சிராக் பஸ்வான் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பியபோதும், தேசிய ஜனநாயகக் கூட்டணி நிதிஷ் குமார் தலைமையில்தான் பீகாரில் தேர்தலை சந்திக்கும்'' என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து கருத்து தெரிவித்து இருக்கும் சிராக் பாஸ்வான், ''விரைவில் எங்களையும் நட்டா தொடர்பு கொள்வார் என்று நம்புகிறேன். அமித் ஷா மற்றும் நட்டாவுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். ஐக்கிய ஜனதா தளம் பெரிய கட்சி. அவர்களை முதலில் சந்தித்ததில் எந்த வருத்தமும் இல்லை. பீகாரில் பிரச்சனைகள் உள்ளன. அவற்றை களைய வேண்டும்.
மே.வங்கத்தில் காங்.-ல் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் சேர்ப்பதுதான் இலக்கு: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
வளர்ச்சி சார்ந்த எந்த விஷயமாக இருந்தாலும், அது தேர்தல் நேரத்தில் பிரதிபலிக்கும். வளர்ச்சி ஏற்பட்டு இருக்க வேண்டும், ஆனால் ஏற்படவில்லை என்பதற்காக என்னுடைய பீகார் மக்கள் வேலை தேடி எங்கும் சென்றுவிடவில்லை'' என்றார்.
பீகாரில் நிதிஷ் குமாருக்கும், பஸ்வானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. அதிக தொகுதிகளை பஸ்வான் கேட்டு வருவதாகவும் ஆனால், இதற்கு நிதிஷ் குமார் மறுத்து வருவதால் கூட்டணி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக தனது வேட்பாளர்களை நிறுத்துவதற்கு ராம்விலாஸ் முடிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், பாஜக குறித்து ராம்விலாஸ் எதையும் தெரிவிக்கவில்லை. தனது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் தனது மகன் சிராக் தேர்தல் குறித்த பணிகளை மேற்கொள்வார் என்று ஏற்கனவே ராம்விலாஸ் தெரிவித்து இருந்தார். தேர்தல் தொடர்பாக தனது மகனின் முடிவே தனக்கு இறுதியானது என்றும் தெரிவித்து இருந்தார்.