பீகார் தேர்தல்: ஜேடியூவிலும் வலுக்கும் அதிருப்தி குரல்: 15 மாஜி அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் டிஸ்மிஸ்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக, ஜேடியூவில் அதிருப்தி குரல்கள் வலிமையாக வெளிப்பட்டு வருகின்றன. பாஜகவை தொடர்ந்து ஜேடியூவில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் 15 பேர் 6 ஆண்டுகளுக்கு டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. அக்டோபர் 28-ந் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
குஜராத் இடைத்தேர்தல்: பாஜகவை ஜெயிக்க விடுவோமா? 200 வேலையில்லா பட்டதாரிகள் திடீர் வேட்பு மனு தாக்கல்
பாஜகவில் அதிருப்தி
பீகார் சட்டசபை தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கும் அதேநேரத்தில் கட்சிகளுக்கு பெரும் தலைவலியாக அதிருப்தியாளர்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளனர். பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த 9 கட்சியின் மூத்த தலைவர்கள் 6 ஆண்டுகளுக்கு டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
ஜேடியூவில் 15 தலைவர்கள் டிஸ்மிஸ்
இதேபோல் பாஜகவின் கூட்டணி கட்சியான ஜேடியூவிலும் உச்சகட்ட அதிருப்தி வெடித்திருக்கிறது. இதனால் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் 15 பேர், 6 ஆண்டுகளுக்கு ஜேடியூவில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். இந்த களேபரங்களுக்கு மத்தியில் முதல்வர் நிதிஷ்குமார் தமது தீவிர பிரசாரங்களை மேற்கொள்கிறார்.
50 தொகுதிகளில் சிவசேனா
இதனிடையே மகாராஷ்டிராவின் சிவசேனா கட்சி, பீகார் தேர்தலில் 40 முதல் 50 தொகுதிகளில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். பாட்னா செல்ல இருக்கும் சஞ்சய் ராவத், மாநில கட்சிகள் சிலவற்றுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக கூறியிருக்கிறார்.
பீகாரில் என்சிபியும் போட்டி
இதேபோல் மகாராஷ்டிராவில் சிவசேனா- காங்கிரஸுடன் கூட்டணி ஆட்சியில் இருக்கும் தேசியவாத காங்கிரஸும் பீகார் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறதாம். இது தொடர்பாக கூறிய அந்த கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல், மகாராஷ்டிராவைப் போலவே இங்கும் கூட்டணிக்கான சாத்தியம் எதுவும் இல்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும் என்றார்.