அமித்ஷாவின் டிஜிட்டல் பேரணிக்கு நூதன எதிர்ப்பு- தட்டுகளை தட்டி ராப்ரிதேவி உள்ளிட்டோர் போராட்டம்
பாட்னா: பீகாரில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் டிஜிட்டல் பேரணிக்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் தட்டுகளை தட்டி ஒலி எழுப்பி நூதன போராட்டம் நடத்தினர்.
கொரோனா யுத்த காலம் முடிவடைந்ததுமே பீகார் சட்டசபைக்கான தேர்தல் நடைபெறும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் பீகாரின் 243 தொகுதிகளுக்கும் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.
கொரோனாவை மறக்க மாணவர்களுக்கு லாலி பாப்.. விந்தையான அறிவிப்பால் பதவியை பறிகொடுத்த மடகாஸ்கர் அமைச்சர்
ஆர்ஜேடி-காங்- மெகா கூட்டணி
இத்தேர்தலில் பாஜக- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்டவை இணைந்து மெகா கூட்டணியை அமைக்க முயற்சிக்கின்றன. இதில் ஜிதன்ரா மஞ்சியின் எச்ஏஎம், ஆர். எல்.எஸ்.பி மற்றும் வி.ஐ.பி. ஆகிய கட்சிகளும் இடம்பெற உள்ளன.
ஆர்ஜேடி புறக்கணிப்பு?
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் ஆர்ஜேடியை தவிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தனியே ஆலோசனை நடத்தின. பின்னர் ஒருகுழுவினர் காங்கிரஸ் மேலிடத்துடன் பேச்சுவார்த்தைக்கு டெல்லி சென்றிருக்கின்றனர். இதனால் ஆர்ஜேடி உச்சகட்ட அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆர்ஜேடியின் தலைவராக தேஜஸ்வி இருப்பதை பிற கட்சிகள் ஏற்கவில்லை என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமித்ஷா டிஜிட்டல் பிரசாரம்
இன்னொரு பக்கம் பாஜக தனது பிரசாரத்தை படுவேகமாக தீவிரப்படுத்தி இருக்கிறது. வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக அமித்ஷாவின் டிஜிட்டல் பேரணி இன்று நடத்தப்பட்டது. பீகாரின் 72,000 பூத்துகளிலும் ஒரே நேரத்தில் அமித்ஷாவின் உரையை ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அமித்ஷாவின் இந்த பேரணிக்கு எதிராக ஆர்ஜேடி நூதன போராட்டத்தை கையில் எடுத்தது.
தட்டுகளை தட்டி போராட்டம்
அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி உள்ளிட்டோர் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இடைவெளி விட்டு வரிசையாக நின்று கொண்டனவர். அனைவரும் கைகளில் தட்டை வைத்துக் கொண்டு இடைவிடாமல் ஒலி எழுப்பினர். கொரோனா லாக்டவுனின் போது பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று கைதட்டுவதற்கு பதிலாக தட்டுகளை பயன்படுத்தி ஒலி எழுப்பினர். அதையே இப்போது பாஜகவுக்கு எதிரான ஆயுதமாக்கி உள்ளது ஆர்ஜேடி.
Recommended Video
பாஜக அணியில் அதிருப்தி
பாஜக அணியில் இடம்பெற்றிருக்கும் லோக் ஜனசக்தி தலைவரான மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமாரை நிறுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஆனால் பாஜக பஸ்வானின் கோரிக்கையை நிராகரித்து வருகிறது. இதனால் பஸ்வான் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.