பீகார் தேர்தல்: 122 தொகுதிகளில் ஜேடியூ போட்டி- பாஜகவுக்கு 121 இடங்கள் ஒதுக்கீடு- நிதிஷ்குமார்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம்- ஜேடியூ 122 தொகுதிகளிலும் பாஜக 121 இடங்களிலும் போட்டியிடும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பீகாரின் மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஜேடியூ-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் ஹெச்.ஏ.எம், மாநில கட்சியான வி.ஐ.பி. ஆகியவை இடம்பெற்றுள்ளன.
35 வருஷமாக சட்டசபை தேர்தலில் போட்டியிடவே இல்லை.. ஆனால் 5 முறை முதல்வராக சாதித்த ஜெகஜால நிதிஷ்குமார்!
பாஸ்வான் கட்சி
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்திக்கும் ஜேடியூவுக்கும் பிரச்சனை என்பதால் பாஜகவுடன் மட்டுமே கூட்டணி என அந்த கட்சி மல்லுக்கட்டுகிறது. ஆனால் பாஜகவோ, பிரதமர் மோடியின் படத்தை லோக்ஜனசக்தி தேர்தல் பிரசாரத்தின் பயன்படுத்த கூடாது என தடைவிதித்திருக்கிறது.
தொகுதி பங்கீடு இதுதான்
இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு விவரங்களை முதல்வர் நிதிஷ்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன்படி, ஜேடியூ 122 தொகுதிகளிலும் பாஜக 121 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன. ஜேடியூவின் 122 தொகுதிகளில் 7 இடங்கள் மாஞ்சியின் ஹெச்.ஏ.எம். கட்சிக்கு ஒதுக்கப்படும். பாஜகவின் 121 இடங்களில் Vikassheel Insaan Party என்ற வி.ஐ.பி. கட்சிக்கு இடங்கள் ஒதுக்கப்படும் என்றார் நிதிஷ்குமார்.
யார் இந்த விஐபி கட்சி
பாஜக அணியில் இடம்பெற்றுள்ள விஐபி கட்சியை மும்பையை சேர்ந்த வர்த்தகர் முகேஷ் ஷானி தொடங்கி இருக்கிறார். பீகாரின் மிகமிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்- EBC வாக்குகளை குறிவைத்து இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது. கங்கா, கோசி உள்ளிட்ட சில மாவட்டங்களின் வாக்குகளுக்காக இந்த கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது பாஜக அணி.
ஆர்ஜேடி-காங். அணி
ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆர்ஜேடி 144; காங்கிரஸ்; 70; இடதுசாரிகள் 29 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அந்த அணியில் ஆர்ஜேடி தலைவரான லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ், முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.