கூட்டணியில் குடைச்சல் கொடுக்கும் பாஸ்வானின் லோக்ஜனசக்தி... நிதிஷ்குமாரை கடுப்பேற்றிய விளம்பரம்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தியின் சீண்டல் நடவடிக்கைகளால் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியூ கடும் அதிருப்தியில் இருக்கிறது. முதல்வர் நிதிஷ்குமாரை கடுப்பேற்றும் வகையில் லோக் ஜனசக்தி, நாளிதழ்களில் முழு பக்க விளம்பரம் வெளியிட்டது சர்ச்சையாகி உள்ளது.
பீகார் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவல் இருப்பதால் பல்வேறு விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
பீகாரில் ஆளும் ஜேடியூ- பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியின் கட்சி சில நாட்களுக்கு முன்னர்தான் இணைந்தது. காங்கிரஸ்- ஆர்ஜேடி கூட்டணியை விட்டு வெளியேறி பாஜக கூட்டணிக்கு தாவியிருக்கிறார் மஞ்சி. இன்னொரு பக்கம் காங்கிரஸ் கூட்டணியில் இடதுசாரிகளும் கை கோர்த்துள்ளனர்.
இதனிடையே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, முதல்வர் நிதிஷ்குமாருடன் தொடர்ந்து மல்லுக்கட்டி வருகிறது. பாஸ்வான் கட்சியின் குடைச்சலுக்கு பதிலடி தரும் வகையில் மற்றொரு தலித் தலைவரான மஞ்சியை நிதிஷ்குமார் கூட்டணியில் இணைத்துக் கொண்டார்.
பீகார் தேர்தல்: ஜேடியூவுடனான தொகுதிப் பங்கீடு குறித்து ஆட்சி மன்ற குழுதான் முடிவெடுக்கும்- பாஜக
இந்த நிலையில்தான் உள்ளூர் நாளிதழ்களில் லோக்ஜனசக்தி முழு பக்க விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அதில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது. Bihar 1st Bihari 1st என்ற வாசகங்களுடன் கூடிய இந்த விளம்பரம் நிதிஷ்குமாருக்கு எதிரானது என்கிறது ஜேடியூ. ஆனால் பாஸ்வான் கட்சியினரோ ஏன் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை குறிக்காதா? என குறுக்குசால் ஓட்டுகிறது.
பீகாரைப் பொறுத்தவரையில் தலித்துகளின் வாக்குகள் மொத்தம் 16%. இதில் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்திக்கு 6% வாக்குகள் இருக்கின்றன. இப்போது பாஸ்வான் மகன் சிராக்தான் கட்சியின் தேசியத் தலைவர். அவரும் இந்த வாக்குகளை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். நிதிஷ்குமாரால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கொண்டுவரப்பட்ட மாஞ்சியின் முஷாகர் ஜாதியினர் மொத்த மக்கள் தொகையில் 25% உள்ளனர். வடக்கு பீகார், கயா, ஜெகனாபாத் பகுதிகளில் இந்த ஜாதியினர் பரவி உள்ளனர். ஆனால் ராம்விலாஸ் பாஸ்வானைப் போல ஜாதிய வாக்குகளைத் தக்க வைத்திருப்பவர் அல்ல மாஞ்சி.
கடந்த கால தேர்தல்களில் மாஞ்சியால் சொந்த ஜாதி வாக்குகளை அறுவடை செய்ய முடியவில்லை. இருந்தபோதும் பாஸ்வானை வெறுப்பேற்ற மாஞ்சியை நிதிஷ்குமார் கொண்டுவந்தார்... நிதிஷ்குமாரை கடுப்பேற்ற விளம்பரங்கள் மூலம் குடைச்சல் கொடுத்து வருகிறது பாஸ்வான் கட்சி. இதனால் பாரதிய ஜனதா கட்சிதான் என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கி முழிக்கிறது.