பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சி தொடருமா? தேஜஸ்விக்கு மகுடம் கிடைக்குமா? இன்று சட்டசபை தேர்தல் ரிசல்ட்
பாட்னா: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீகார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 8ம் தேதி முதல் நவம்பர் 7-ந் தேதி வரை 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. எந்தவித அசம்பாவிதங்களும் வன்முறையும் இல்லாமல் அமைதியாக இந்த வாக்குப் பதிவுகள் நடைபெற்று முடிவடைந்தன.
மொத்தம் 7.36 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். பீகாரில் ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகள் ஒரு அணியாகவும் பாஜக-ஜேடியூ மற்றொரு அணியாகவும் களம் கண்டன. சிராக் பாஸ்வானில் லோக் ஜனசக்தி தனியாக போட்டியிட்டது.
பீகார் எக்ஸிட் போல் முடிவுகள்
நவம்பர் 7-ல் இறுதி கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்த உடனேயே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் - எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டன. பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகளில் பீகாரில் தொங்கு சட்டசபைக்கான வாய்ப்புகள் இருப்பதாக கணித்திருந்தன. ஒருசில எக்ஸிட் போல் முடிவுகளில் ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை அமைக்க வாய்ப்பிருப்பதாக கணித்திருந்தன. பீகாரில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை.
வேலைவாய்ப்பின்மை
பீகாரில் 15 ஆண்டுகளாக முதல்வராக நிதிஷ்குமார் இருந்து வருகிறார். ஆர்ஜேடி, பாஜக என மாறி மாறி கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சியை நகர்த்திவிட்டார் நிதிஷ்குமார். ஆனால் நிதிஷ்குமார் ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை மிகப் பெரிய பிரச்சனையாக இருந்தது. இது தேர்தல் களத்தில் எதிரொலித்தது.
முதல்வராவாரா தேஜஸ்வி?
ஆர்ஜேடி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வியாதவை நிறுத்தி இருக்கிறது. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சனை ஆகியவற்றை கையில் எடுத்து தேஜஸ்வி யாதவ் பிரசாரம் செய்தார். இது பீகார் இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே எக்ஸிட் போல் முடிவுகளும் சுட்டிக்காட்டுகின்றன.
எதிர்பார்ப்பு
பீகார் சட்டசபை தேர்தலில் 3 கட்டங்களாக பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. கொரோனா பரவல் காலத்தில் நடைபெற்ற நாட்டின் முதலாவது தேர்தல். இதுவரை பீகாரில் மத்தியில் ஆளும் பாஜக தனிப்பெரும் கட்சியாகவும் உருவெடுத்தது இல்லை. இந்த நிலையில் பீகார் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
பலத்த ஏற்பாடுகள்
பீகாரில் 38 மாவட்ட வாக்குகளும் 55 மையங்களில் எண்ணப்படுகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.