ஒருபக்கம் முதல்வர் பதவியை தந்துவிட்டு.. இன்னொரு பக்கம் செக் வைத்த அமித் ஷா.. நிதிஷுக்கு செம சிக்கல்!
பாட்னா: பீகாரில் துணை முதல்வராக இத்தனை காலம் இருந்து வந்த பாஜகவின் சுஷில் மோடிக்கு இந்த முறை துணை முதல்வர் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக, இந்த முறை இரண்டு புதிய தலைகளை அமித் ஷா துணைமுதல்வராக இறக்கி உள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணி இன்று மீண்டும் பீகாரில் ஆட்சி அமைத்துள்ளது. பீகாரின் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ் குமார் மீண்டும் பதவி ஏற்றுள்ளார்.
பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 125 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை என்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது.காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி வெறும் 110 இடங்களில் வென்று உள்ளது.
எப்படி
இந்த தேர்தலில் பாஜக அதிக வெற்றிபெற்று இருந்தாலும் கூட, நிதிஷ் குமார்தான் முதல்வர் என்று பாஜக அறிவித்துள்ளது. . தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும்தான் வென்று இருக்கிறது.ஆனாலும் நிதிஷ் குமாருக்கு பாஜக முதல்வர் பதவியை கொடுத்துள்ளது. நிதிஷுக்கு இப்போது முதல்வர் பதவியை கொடுத்து இருந்தாலும்.. இன்னொரு பக்கம் அமித் ஷா அவருக்கு பெரிய செக் வைத்து இருக்கிறார்.
என்ன நடந்தது
நிதிஷ் குமாருக்கு மிகவும் நெருக்கமான தலைவர்தான் பாஜகவின் சுஷில் மோடி. இவர்தான் நிதிஷ் குமாரின் 15 வருட ஆட்சியில் பல முறை துணை முதல்வராக இருந்தார். பீகாரில் பாஜகவின் முக்கிய தலைவரும் சுஷில் மோடிதான். நிதிஷ் குமார் - பாஜக இடையே பாலம் போல செயல்பட்டவர் சுஷில் மோடி. இப்போது நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவி சிக்கல் இன்றி கிடைக்கவும் கூட சுஷில் மோடிதான் ஒரு வகையில் முக்கிய காரணமாக இருந்தார் .
ஆனால் நீக்கம்
ஆனால் இவரை துணை முதல்வராக அறிவிக்காமல், தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகிய இரண்டு புதிய முகங்களை பாஜக துணை முதல்வராக தேர்வு செய்துள்ளது. பாஜகவின் சுஷில் மோடி, நிதிஷுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார். நிதிஷுக்கு ஆதரவாக செல்கிறார் என்ற பிம்பம் நிலவி வரும் நிலையில்.. சுஷில் குமாருக்கும் பாஜக செக் வைத்துள்ளது. அதோடு இவரை பீகாரில் இருந்தே தூக்கி சென்று.. மேற்கு வங்கத்தில் தேர்தல் பணிகளை செய்ய வைக்க போவதாகவும், மத்தியில் முக்கிய பொறுப்புகளை வழங்க போவதாகவும் கூறுகிறார்கள்.
போச்சு
பாஜகவின் ஆக்சன்களில் இருந்து நிதிஷ் தப்பிக்க சுஷில் மோடி முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில்தான் சுஷில் குமாரை பாஜக தூக்கி அடித்துள்ளது. இதற்கு பதிலாக தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகிய இரண்டு பாஜக தலைவர்களை துணை முதல்வராக நியமித்துள்ளார். இரண்டு பேருமே, ஒரு காலத்தில் நிதிஷ் குமாருக்கு எதிராக இருந்தவர்கள். பாஜக சார்பாக தர்கிஷோர் பிரசாத் போட்டியிட்ட தொகுதியில் அவருக்கு எதிராக ஒரு காலத்தில் கடுமையாக பிரச்சாரம் செய்தவர் நிதிஷ் குமார்.
ரேணு தேவி
ஒரு காலத்தில் தர்கிஷோரை வீழ்த்த நிதிஷ் குமார் கடுமையாக பிரச்சாரங்களை செய்தார். தற்போது அவரே நிதிஷுக்கு துணை முதல்வராகி உள்ளார். ஏபிவிபி அமைப்பை சேர்ந்த இவர், ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு மிகவும் நெருக்கம் ஆனவர். இன்னொரு பக்கம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பாஜகவின் ரேணு தேவியின் வருகையும் நிதிஷ் குமாருக்கு சிக்கலாக மாறியுள்ளது.
திட்டம்
நிதிஷ் குமாரின் மீதம் இருக்கும் வாக்கு வங்கியில் கை வைக்கும் வகையில் ரேணு தேவியை வளர்த்து விட பாஜக முடிவு செய்துள்ளது என்கிறார்கள். 2025 சட்டசபை தேர்தலில் நிதிஷை மொத்தமாக ஒன்றுமில்லாமல் செய்யும் திட்டம்தான ரேணு தேவி வருகை என்கிறார்கள்.அதேபோல் பெயருக்கு முதல்வர் பதவியை கொடுத்துவிட்டு ஆட்சியை கட்டுப்படுத்த இரண்டு முதல்வர்களை பாஜக கொண்டு வந்துள்ளது.
பெயருக்கு முதல்வர்
நிதிஷ் குமார்தான் முதல்வர் என்றாலும்.. இந்த இரண்டு துணை முதல்வர்கள்தான் ஆட்சியை கட்டுப்படுத்த போகிறார்கள் என்று இப்போதே பேச்சுக்கள் எழ தொடங்கி உள்ளது. அதிலும் தர்கிஷோர் அரசியல் ஆதிக்கம் மிக்கவர் என்பதால்.. நிதிஷ் குமாருக்கு பாஜக வசமாக செக் வைத்துள்ளது என்று கூறுகிறார்கள்.