ஆளே இல்லாத கடையில் எதுக்கு ? எங்க கட்சிக்கு வாங்க.. சிராக் பாஸ்வானுக்கு காங்., ஆர்ஜேடி அழைப்பு
பாட்னா: லோக் ஜனசக்தியின் 5 எம்.பி.க்கள் ஜேடியூவுக்கு தாவிவிட்ட நிலையில் அக்கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வானை தங்கள் கட்சியில் சேருமாறு காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி அழைப்பு விடுத்துள்ளன.
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜகவின் நம்பிக்கைக்குரிய பி டீமாக இருந்தவர் சிராக் பாஸ்வான். தமது லோக் ஜனசக்தி கட்சி வேட்பாளர்களை பாஜகவின் கூட்டணி கட்சியான ஜேடியூவுக்கு எதிராக மட்டுமே போட்டியிட வைத்தார்.
பாஜகவால் கழற்றிவிடப்பட்ட சிராக் பாஸ்வான்
இதனால் பாஜகவைவிட ஜேடியூ குறைந்த இடங்களில்தான் வெல்ல முடிந்தது. தமது இலக்கு முடிந்த கையோடு சிராக் பாஸ்வானை பாஜக கழற்றிவிட்டது. மத்திய அமைச்சர் பதவி தருவதாக கூறி வந்த பாஜக இப்போது சிராக் பாஸ்வானை பற்றி கவலைப்படவில்லை.
கூண்டோடு தாவிய எம்.பிக்கள்
அத்துடன் சிராக் பாஸ்வானின் மொத்தம் உள்ள 6 எம்.பிக்களில் 5 பேர் ஜேடியூ பக்கம் தாவிவிட்டனர். இந்த 5 பேரும் தங்களை தனி அணியாக அங்கீகரிக்க வேண்டும் என்று லோக்சபா சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையும் ஏற்கப்பட்டது. இந்த நிலையில் 5 எம்.பிக்களையும் கட்சியில் இருந்து நீக்குவதாக இன்று சிராக் பாஸ்வான் அறிவித்திருக்கிறார்.
காங். ஆர்ஜேடி அழைப்பு
இப்போது பீகார் அரசியலில் தனிமரமாக நிற்கிறார் சிராக் பாஸ்வான். இதனால் தனிக்கட்சி நடத்திய போதும்.. எங்களுடன் வந்து இணைந்துவிடுங்கள் என்று காங்கிரஸும் ராஷ்டிரிய ஜனதா தளமும் (ஆர்ஜேடி) அழைப்பு விடுத்து வருகின்றன. தங்களது கட்சிக்கு வந்தால் நல்ல பதவியும் கவுரவமும் கிடைக்கும் என இரு கட்சித் தலைவர்களும் மாறி மாறி அழைத்து வருகின்றனர்.
சிராக் பாஸ்வான் என்ன செய்வார்?
ஆனால் சிராக் பாஸ்வான் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இப்படியே ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றப் போகிறாரா? அல்லது ஏதோ அரசியலில் இருந்தால் போதும் என கட்சியையே கலைக்கப் போகிறாரா என்பது விரைவில் தெரியும். அதேநேரத்தில் பாஜகவை நம்பிய கட்சிகள் அழிக்கப்பட்டே இருக்கின்றன என்பதற்கான இப்போதைய சாட்சியாக சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.