கிறுகிறுக்க வைக்கும் பீகார் வேட்பாளர்கள் பின்னணி... நல்லவர்களுக்கு இவ்வளவு பஞ்சமா..?
பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலுக்காக அம்மாநில அரசியல் கட்சிகள் களமிறக்கியுள்ள வேட்பாளர்கள் பின்னணியை பார்த்தால் கிறுகிறுக்க வைக்கிறது.
கொலை, கட்டப்பஞ்சாயத்து, பெண்களுக்கு எதிரான குற்றச்செயல், கற்பழிப்பு என பல்வேறு புகார்களுக்கான நபர்களுக்கு பீகார் அரசியல் கட்சிகள் சீட்களை வாரி வழங்கியுள்ளன.
கொரோனா பரவலுக்கு மத்தியில் பீகார் சட்டமன்றத் தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய மூன்று தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் முதற்கட்டமாக நடைபெறும் 71 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் 31 % பேர் குற்றப்பின்னணி உடையவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதன் படி லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களில் 73% பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.ஆர். அமைப்பு நடத்திய புள்ளியியல் ஆய்வில் இந்த விவரம் வெளிவந்துள்ளது.
ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு அடுத்தப்படியாக பாஜக வேட்பாளர்களில் 72% பேர் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் என டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இதேபோல் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி வேட்பாளர்களில் 59% பேர் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என்பது வெளிவந்துள்ளது.
என்னது 10 லட்சம் பேருக்கா.. தேஜஸ்வி யாதவ் வாக்குறுதியால் ஆடிப்போன நிதிஷ் குமார்.. கடும் பதிலடி
காங்கிரஸ் களமிறக்கியுள்ள வேட்பாளர்களில் 57 % பேர் குற்றப்பிண்ணனி கொண்டர்வகள் என்பதும் ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்களில் 43 % பேர் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிவந்திருக்கிறது. இதேபோல் பகுஜன் சமாஜ் வேட்பாளர்களில் 31 % பேர் கிரிமினல் ரெக்கார்டு உடையவர்கள்.
பீகார் சட்டமன்ற முதற்கட்ட தேர்தலில் அனைத்துக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் 1,064 வேட்பாளர்களில் மொத்தம் 328 பேர் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 328 பேரில் 29 பேர் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் என்பதும் அந்த 29 பேரில் 3 பேர் கற்பழிப்பு புகார்களை பின்னணியாக கொண்டவர்கள் என்பதும் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் அமைப்பு நடத்திய ஆய்வில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.