சூடு பிடித்த பீகார் தேர்தல்.. காங்கிரஸ், ஜெடியு வேட்பாளர் பட்டியல் வெளியீடு..இன்று வேட்புமனு தாக்கல்
பாட்னா: பீகார் மாநில சட்டசபை தேர்தலில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் மற்றும் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் இரண்டும் வெளியிட்டுள்ளன. நேற்று முன்தினம் பாஜக வெளியிட்டு இருந்தது.
பீகாரில் மொத்தம் இருக்கும் 243 சட்டசபை தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. ராஷ்டிரிய ஜனதா தளம் 144 இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்களில் போட்டியிடுகின்றன. இதில் மற்ற தோழமை கட்சிகளுக்கு காங்கிரசும், ராஷ்டிய ஜனதா தளமும் தொகுதிகளை பிரித்துக் கொடுத்து இருக்கின்றன.
அதன்படி கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மொத்தமாக காங்கிரஸ் 29 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் ஒதுக்கியது போக வெறும் 81 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலின் பேரில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஆளும் ஐக்கிய ஜனதா தளமும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாஜகவுடன் இணைந்து ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடுகிறது. மொத்தம் 115 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை ஐக்கிய ஜனதா தளம் வெளியிட்டுள்ளது. இதில் சமீபத்தில் அந்த மாநிலத்தின் போலீஸ் டிஜிபியாக இருந்து, பதவியை ராஜினாமா செய்த குப்தேஸ்வர் பாண்டேவின் பெயர் இடம் பெறவில்லை. இந்தக் கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் ஜித்தன் ராம் மஞ்ஜியின் இந்துஸ்தானி அவாம் மோட்சா கட்சிக்கு ஏழு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பீகார்: இதென்ன புதுகலாட்டா.... அடுத்தடுத்து பாஸ்வான் கட்சிக்கு தாவும் பாஜக தலைவர்கள்
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து இருக்கும் தேஜ் பிரதாப் யாதவின் (லாலுவின் மூத்த மகன்) மனைவி ஐஸ்வர்யாவின் தந்தை சந்திரிகா ராய் பார்சா தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் முன்னாள் முதல்வர் தரோகா பிரசாத் ராயின் மகனாவார். தேஜ் பிரசாத் யாதவுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமண முறிவு ஏற்பட்டதையடுத்து, ஐக்கிய ஜனதா தளத்தில் தன்னை ராய் இணைத்துக் கொண்டுள்ளார்.
வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கின்றனர். தேர்தல் மூன்று கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும்.