தேர்தல் உச்சம்... லாலு கட்சியில் இருந்து.... மூத்த தலைவர் ரகுவன்ஷ்.... ராஜினாமா!!
பாட்னா: பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இருந்து மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரகுவன்ஷ் பிரகாஷ் சிங் ராஜினாமா செய்துள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரகுவன்ஷ் சிங் லாலுவுக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
சிறையில் இருக்கும் லாலுவுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், ''ஜனநாயக் கர்புரி தாகூர் மரணத்துக்கு பின்னர் கடந்த 32 ஆண்டுகளாக உங்களுடன் இருந்துவிட்டேன். கட்சித் தலைவர்களின் மீது எனக்கு மிகுந்த பாசம் உள்ளது. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவர் பதவியை ரகுவன்ஷ் சிங் ராஜினாமா செய்தார். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட பின்னர் பாட்னாவில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கடந்த புதன் கிழமை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த தேர்தலின்போது, ஏற்பட்ட கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக லாலுவின் மகனும், தற்போது அந்தக் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கட்சியால் நியமனம் செய்யப்பட்டு இருந்தார். இதற்கு ரகுவன்ஷ் சிங் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
ரூ 4 கோடி கடன் வாங்கி மோசடி.. சென்னை தொழிலதிபர் மீது ஹர்பஜன் சிங் புகார்
நீண்ட நாட்களாக கட்சியில் ரகுவன்ஷ் சிங் ஓரம் கட்டப்பட்டு வந்தார். கட்சியில் ராஜ்ய சபை சீட் கேட்டு வந்த நிலையில், இவருக்கு மறுக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஜூன் 23ஆம் தேதி, கட்சியின் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இவருக்கு பதிலாக கட்சியில் ராமா சிங் என்பவரை சேர்பதற்கு கட்சி எடுத்த முடிவை அடுத்து தானாக முன் வந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.