என்னது 10 லட்சம் பேருக்கா.. தேஜஸ்வி யாதவ் வாக்குறுதியால் ஆடிப்போன நிதிஷ் குமார்.. கடும் பதிலடி
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல், களை கட்ட தொடங்கியுள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ் வழங்கிய வாக்குறுதியால், நிலைகுலைந்து போய் உள்ளார் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், முதல்வருமான நிதீஷ் குமார்.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. ஐக்கிய ஜனதாதளம்-பாஜக ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை மற்றொரு கூட்டணியாகவும் களம் காண்கின்றன.
நிதிஷ்குமார்தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பக்கம் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக களமிறங்குகிறார்.
பீகார் சட்டசபை தேர்தல் 2020: கொரோனா தடுப்பூசி இலவசம் - பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
இரு தரப்பு தாக்குதல்
இன்னொரு பக்கம், ராம்விலாஸ் பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வன், நிதீஷ் குமாருக்கு எதிராக கடும் விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வருகிறார். தனது தந்தை மரணத்திற்கு ஆறுதல் கூட சொல்லவில்லை என்று குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். பாஜக மீது மென்மையான அணுகுமுறையைக் கையாளும் சிராக், நிதிஷ் குமாரை முதல் எதிரியாக பார்க்கிறார். இன்னொரு பக்கம் தேஜஸ்வி யாதவ், நிதிஷ் குமாரை குறிவைத்து தாக்குகிறார். இருதரப்பு தாக்குதல்களில் நிலை குலைந்து போய் உள்ளார் நிதிஷ்குமார்.
10 லட்சம் பேருக்கு அரசு வேலை
தேர்தல் பிரச்சாரத்தின் போது தேஜஸ்வி யாதவ் கொடுத்த ஒரு வாக்குறுதி நிதிஷ்குமாருக்கு தூக்கத்தை கெடுத்து விட்டது என்று சொல்லலாம். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பீகாரில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை தருவோம் என்று அறிவித்தார் தேஜஸ்வி. கொரோனா காரணமாக பலரும் வேலைவாய்ப்பு இழந்துள்ள நிலையில், இந்த வாக்குறுதி, இளைஞர்கள் மத்தியில் எடுபடத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில்தான் அவசரமாக அதற்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளார் நிதிஷ்குமார்.
பணம் எங்கே
தனது தேர்தல் பிரச்சாரத்தில் நிதிஷ்குமார் பேசுகையில், 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதாக பொய்யான வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன. இத்தனை பேருக்கு எங்கிருந்து சம்பள பணம் பெறப்படும். எந்த ஊழலுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்களோ, அந்த ஊழல் பணத்தில் இருந்து எடுத்து கொடுப்பீர்களா? அல்லது கள்ள நோட்டு அச்சடித்து பணம் கொடுப்பீர்களா என்று கோபால்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது நிதிஷ்குமார் காட்டமாக பேசியுள்ளார். மாட்டு தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் சிறையில் இருப்பதை மறைமுகமாக இவ்வாறு நிதிஷ்குமார் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
பெரிய வாக்குறுதியாக கொடுங்கள்
வேலைவாய்ப்பு பற்றிய வாக்குறுதி அளிப்பவர்கள், அரசு நிர்வாகத்தில் அனுபவமோ, அடிப்படை அறிவோ, இல்லாதவர்கள். இது போன்ற ஒரு வாக்குறுதியை உலகத்தில் எங்காவது பார்க்க முடியுமா. 10 லட்சம் பேருக்கு மட்டும் வேலை வாய்ப்பு தருவதாக வாக்குறுதி அளித்து நிறுத்திக் கொள்ள வேண்டாம். ஒட்டுமொத்த மக்களுக்கும் வேலை வாய்ப்பு தருவேன் என்று கூற வேண்டியது தானே? இவ்வாறு நிதிஷ்குமார் ஆவேசமாக தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார்.
நிதிஷ் குமாருக்கு சோர்வு
அதேநேரம் தேஜஸ்வி யாதவ் இதுபற்றி கூறுகையில், நான் துணை முதல்வராக பதவி வகித்துள்ளேன். நான் அனுபவசாலி கிடையாது முதிர்ச்சி இல்லாதவன் என்று நினைத்தால், எதற்காக 20 ஹெலிகாப்டர்களுடன் பாஜக தலைவர்கள் என்னை துரத்தினார்கள். நான் தனி நபர் தானே. அவர்களோ பெரிய கூட்டம். என்னை விரட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது. நிதிஷ்குமார் உடலளவிலும் மனதளவிலும் சோர்வடைந்து போய்விட்டார். 15 வருடங்களாக ஆட்சியில் இருந்த பிறகும் வேலைவாய்ப்புக்கு நிதி எங்கிருந்து வரும் என்று கேட்கிறார். பீகார் மாநிலத்தின் பட்ஜெட் மதிப்பு 30 ஆயிரம் கோடி ரூபாய். அந்த பணம் எங்கே? நிதீஷ் குமார் மேற்பார்வையில் மொத்தம் 60 ஊழல்கள் நடந்துள்ளன. அந்த பணம் இதற்கு செலவாகியுள்ளதா, என்று தெரிவித்துள்ளார் தேஜஸ்வி யாதவ்.