பீகார் சட்டசபைத் தேர்தல்: லாலு குடும்பத்திற்கு எதிராக மருமகள் ஐஸ்வர்யா ராயை களமிறக்கிய நிதிஷ்
பீகார் சட்டசபைத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் மருமகள் ஐஸ்வர்யா ராய் நிதீஷ் குமாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போகிறார்.
பாட்னா: பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியது. பிரச்சார களத்தில் அனல் பறந்து வரும் நிலையில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்திற்கு எதிராக அவரது மருமகள் ஐஸ்வர்யா ராயை களமிறக்கியுள்ளார் நிதிஷ்குமார். தனது மனைவியிடமே மிக மோசமாக நடந்து கொண்டவர்கள் எப்படி இந்த மாநிலத்தை ஆள சரியானவர்களாக இருப்பார்கள். ஒரு படித்த பெண்ணிற்கு நேர்ந்த நிலையைப் பாருங்கள் மக்களே என்று லாலு வீட்டு சொந்தக்கதையை பேசி வாக்கு சேகரித்துள்ளார் நிதிஷ் குமார்.
பீகார் மாநிலத்தில் வரும் 28ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7ஆம் தேதி வரை மூன்று கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது. 15 ஆண்டுகாலம் ஆட்சியில் உள்ள நிதிஷ்குமாருக்கும், ஆட்சியை பறிகொடுத்து வனவாசத்தில் உள்ள லாலு பிரசாத் யாதவிற்கும்தான் கடும் போட்டி நிலவுகிறது.
லாலுவிற்கு எதிராக அவரது முன்னாள் மருமகள் ஐஸ்வர்யாவை களமிறக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராய் முன்னாள் முதல்வர் தரோகா பிரசாத் ராயின் பேத்தியும் சந்திரிகா ராயின் மகளும் ஆவார். இவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் யாதவை கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த சூழலில் போதைப் பொருட்கள் உட்கொண்டு தன்னை அடித்து துன்புறுத்தியதாக தேஜ் பிரதாப் மீது ஐஸ்வர்யா பரபரப்பு குற்றம்சாட்டினார். இதன் தொடர்ச்சியாக விவாகரத்து கோரி பாட்னா நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.
அத்தனை வாய்ப்பு தந்தும் வீணடிச்சுட்டீங்க.. பீகாருக்கு துரோகம் பண்ணிட்டீங்க.. நிதீஷ் மீது பாயும் லாலு
பீகார் மாநில தேர்தல் களம்
பீகாரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 28 முதல் நவம்பர் 7வரை நடைபெறும் தேர்தலுக்காக அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர் வேட்பாளர்கள். பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ்குமார், முதல்வராக இருக்கிறார். இந்த கூட்டணியில் பாஜக பிரதான கட்சியாக உள்ளது. லாலு பிரசாத் யாதவின் ராஸ்டிரிய ஜனதா தளம், பீகாரில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.
தேஜஸ்வி யாதவ்
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள லாலு இந்த தேர்தலில் ஆட்டத்திலேயே இல்லை அவரது மகன்கள்தான் கட்சியை வழிநடத்திச் செல்கின்றனர். தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
லாலு சம்பந்தியை தூக்கிய நிதிஷ்
சட்டசபை தேர்தல் களத்தில் பிரதான எதிர்கட்சியாக ஆர்ஜேடியை அடித்து வெளுத்து மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்படுகிறார் நிதிஷ்குமார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்.ஜே.டி.கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தனர். இவர்களில் லாலு பிரசாத் யாதவின் சம்மந்தி சந்திரிகா ராயும் ஒருவர் என்பதால், பீகார் தேர்தல்களம், எதிர்பாராத திருப்பங்களை எல்லாம் சந்திக்கிறது.
லாலு குடும்பத்திற்கு எதிராக மருமகள் பிரச்சாரம்
ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டி பிரிந்து போன மூத்த மருமகள் ஐஸ்வர்யா ராய் பீகார் சட்டசபைத் தேர்தலில் நிதிஷ் குமாருக்கு அதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்.
தனிப்பட்ட தாக்குதல்
ஆட்சியின் நன்மை தீமைகளைப் பற்றி சொல்லி பிரச்சாரம் செய்வதை விடுத்து தனிப்பட்ட தாக்குதல்களாக பிரச்சாரக் கூட்டங்கள் மாறிவிட்டன. நேற்றைய தினம் பீகாரில் உள்ள சரண் மாவட்டம் பர்சா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சந்திரிகா ராய்க்கு ஆதரவாக முதல்வர் நிதிஷ்குமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
நிதிஷ்குமாருக்கு ஆதரவு
இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சந்திரிகா ராய், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரச்சாரக்கூட்டத்தில் முதல்வர் நிதிஷ் குமார் வந்த போது, அவரது காலைத் தொட்டு ஐஸ்வர்யா ஆசி பெற்றார். பொதுமக்களிடையே பேசிய ஐஸ்வர்யா ராய், எனது தந்தைக்காக வாக்குகள் பெற இங்கே வந்துள்ளேன். நீங்கள் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வெளுத்து வாங்கிய நிதிஷ்
இதையடுத்து பேசிய நிதிஷ் குமார், தனது மனைவியிடமே மிக மோசமாக நடந்து கொண்டவர்கள் எப்படி இந்த மாநிலத்தை ஆள சரியானவர்களாக இருப்பார்கள். ஒரு படித்த பெண்ணிற்கு நேர்ந்த நிலையைப் பாருங்கள் மக்களே. இவருக்கு நேர்ந்தது வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. இவர் திருமண நிகழ்வில் நானும் கலந்து கொண்டேன். ஆனால் அதன்பிறகு நடந்தது மிகவும் வெட்கக்கேடானது என்றும் பேசி பிரச்சாரம் செய்தார் நிதிஷ்குமார்.