சிராக் பஸ்வானால் கடும் அப்செட்... முதல்வர் நாற்காலியில் விருப்பமில்லாமல் அமரும் நிதிஷ்குமார்
கடும் போராட்டத்திற்கு இடையே வெற்றி பெற்றுள்ளார் நிதிஷ்குமார். அந்த வெற்றி மனரீதியாக சில பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது காரணம் சின்னப்பையன் சிராக்பஸ்வான்தான்.
பாட்னா: நடந்து முடிந்த பீகார் சட்டசபைத் தேர்தலில் வெற்றிக்கனியை பறித்தாலும் அதை முழு மனதோடு சந்தோஷமாக சுவைக்க முடியாமல் தவிக்கிறார் ஜேடியு தலைவரும் முதல்வருமான நிதிஷ்குமார். பாஜக அதிக இடங்களை வென்றிருந்தாலும் முதல்வர் நாற்காலியை நிதிஷ்குமாருக்கு விட்டு கொடுத்தாலும் விருப்பமில்லாமலேயே இம்முறை பதவியேற்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. காரணம் தனது வெற்றிக்கு கடும் போட்டியை கொடுத்ததோடு 30 இடங்களில் வெற்றியை தட்டிவிட்ட சின்னப்பையன் சிராக் பஸ்வான்தான் நிதிஷ்குமாரின் மன வேதனைக்கு காரணம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
பீகார் சட்டசபை தேர்தலில் ஆளும் ஜேடியு பாஜக கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ் கட்சிகள் இணைந்து மகா கூட்டணியை அமைத்தன. ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக சிராக் பஸ்வான் தனது லோக்ஜனசக்தி கட்சி சார்பில் வேட்பாளர்களை களமிறக்கி குடைச்சலை கொடுத்தார். பாஜகவிற்கு ஆதரவு ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிர்ப்பு என்கிற ரீதியில் வேட்பாளர்களை நிறுத்தினார் சிராக் பஸ்வான்.
லோக்ஜனசக்தி ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வென்றாலும் 5 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகளைப் பற்றி பெரிய கட்சிகளை ஆச்சரியப்பட வைத்தது. இந்த கட்சி வேட்பாளர்கள் பிரித்த வாக்குகள் ஜேடியு வேட்பாளர்கள் தோல்வியடைய காரணமாக அமைந்தது.
யார் அந்த "கருப்பு ஆடு".. ஒரே ஒரு டிவீட்தான்.. மொத்த காங். கூடாரமும் கன்பியூஸ்.. கிளறி விட்ட குஷ்பு
நிதிஷ்குமார் அப்செட்
பீகார் சட்டசபைக்கு மூன்று கட்டமாக நடந்த தேர்தலுக்காக வாக்கு எண்ணிக்கை கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் ஜேடியு பாஜக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மெகா கூட்டணிக்கு 110 இடங்களே கிடைத்தன. பாஜக 74 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு 43 தொகுதிகளை மட்டுமே பிடித்தது. இதன்மூலம் கூட்டணியில் இருந்த பாஜகவுக்கு அடுத்த நிலைக்கு நிதிஷ்குமார் கட்சி தள்ளப்பட்டது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளாராம் நிதிஷ்குமார்.
குடைச்சல் கொடுத்த சிராக் பஸ்வான்
தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு ஜேடியு பாஜக கூட்டணியை விட்டு பிரிந்து தனித்து களமிறங்கிய லோக் ஜனசக்தி, நிதிஷ் குமாருக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி பிரச்சாரம் செய்தார். ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றாலும் ஜேடியு கட்சி வேட்பாளர்கள் 30க்கும் மேற்பட்டவர்கள் தோல்வியடைய பெரிய பங்காற்றியுள்ளார் சிராக் பஸ்வான்.
மன வேதனை
நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு கட்சியின் செல்வாக்கை காலி செய்ய வேண்டும் என்ற திட்டத்தை சிராக் பஸ்வான் சிரமேற்கொண்டு செய்து முடித்து விட்டார். அதோடு மட்டுமல்லாது தேர்தல் வெற்றிக்கு பிறகும் நிதிஷ்குமார் முதல்வரானால் ஒரு போது ஆதரவு தரப்போவதில்லை என்றும் கூறி குடைச்சலை அதிகரித்தார். சிராக் பஸ்வானில் இந்த செயல்பாடுகள் நிதிஷ்குமாரை அப்செட்டில் ஆழ்த்தியுள்ளது.
விருப்பமில்லாத நிதிஷ்குமார்
நிதிஷ்குமார்தான் முதல்வராக தொடர்வார் என்று மோடி, ஜேபி நட்டா ஆகியோர் உறுதியாக கூறி விட்டனர். முதல்வர் நிதிஷ்குமாருக்கு அனைத்து சுதந்திரமும் கொடுக்கப்படும் என்று சீனியர் பாஜக தலைவர்கள் கூறி வந்தாலும் நாற்காலியில் அமர விருப்பமில்லாமலேயே இருக்கிறாராம் நிதிஷ்குமார். ஜேடியுவின் சிட்டிங் எம்எல்ஏக்கள் மற்றும் தனது அமைச்சரவையில் இருந்த முக்கிய அமைச்சர்கள் தோல்விக்கு காரணமாகி விட்டாரே சிராக் பஸ்வான் என்ற கவலை நிதிஷ்குமாரின் மனதை அரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
மோடிக்கு நன்றி
தங்களுடைய கூட்டணி கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி கூறியிருந்தார் நிதிஷ்குமார். அதே போல பிரதமர் மோடிக்கும் நன்றியை தெரிவித்துள்ளார் நிதிஷ்குமார். முதல்வர் நாற்காலி இனி முள்கிரீடமாகவே இருக்கும் என்ற எண்ணமும் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்டிருக்கிறது.
பாஜகவின் ஆதிக்கம்
பீகாரில் தீபாவளிக்கு பிறகு நிதிஷ்குமாரின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவையில் பாஜக முக்கிய பங்கு வகிக்கும். மிக முக்கிய துறைகளான கல்வித்துறை, உள்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட பல துறைகளை பாஜக தனது வசப்படுத்தும் என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன.