தலைகீழாக மாறுமா? நிமிடத்திற்கு நிமிடம் மாறும் முடிவு.. பாஜகவா-ஆர்ஜேடியா? டென்சனில் மக்கள்
பாட்னா: பீகாரில் ஏராளமான தொகுதிகளில் 100 முதல் 5000 வாக்குகளே முன்னிலை காணப்படுவதால் தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்கிற நிலையே உள்ளது.
அத்துடன் தற்போதைய நிலையில் 170 தொகுதிகளில் ஜேடியூ- ஆர்ஜேடி கூட்டணியிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தொகுதிகளில் இரு வேட்பாளர்களுக்கிடையே வாக்குகள் வித்தியாசம் வெறும் 5000 என்ற அளவில் உள்ளது.
குறிப்பாக 55 தொகுகிளில் வாக்கு வித்தியாசம் 1000க்கும் கீழ் உள்ளது. எனவே இந்த தொகுதிகளில் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்ற பரபரப்பு நிலவுகிறது.
பாஜக கூட்டணி முன்னிலை
தற்போதைய நிலையில் பீகார் சட்டசபை தேர்தல் ஜக்கிய ஜனதா தளம் - பாஜக கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணி 121 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய மகா கூட்டணி 114 இடங்களிலும் முன்னிலை வகிக்க்கின்றன. ஏஐஎம்ஐஎம் கட்சி 5 இடங்களிலும், பிஎஸ்பி ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.
மாறி மாறி முன்னிலை
இந்த சூழலில் சுமார் 170 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கும், ஆர்ஜேடி காங்கிரஸ் கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. இங்கு வாக்கு வித்தியாசங்கள் 5000 என்கிற அளவில் உள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலையில் ஆர்ஜேடி கூட்டணி முன்னிலை வகித்த நிலையில் அதன்பிறகு நிலைமை மாறியது. பாஜக கூட்டணி முன்னிலை வகித்தது.
வாக்கு வித்தியாசம் குறைவு
6 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 200க்கும் குறைவாக உள்ளது. 13 தொகுதிகளில் 500க்கும் குறைவாகவே வாக்குவித்தியாசம் உள்ளது. இதேபோல் 21 தொகுதிகளில் 1000க்கும் குறைவாகவே வாக்கு வித்தியாசம் உள்ளது. 32 தொகுதிகளில் 2000க்கும் குறைவாகவே வாக்குவித்தியாசம் உள்ளது. 48 தொகுதிகளில் 3000க்கும் குறைவாக வாக்கு வித்தியாசம் உள்ளது. 66 தொகுதிகளில் 5000க்கும் குறைவாக வாக்குவித்தியாசம் உள்ளது.
மாறும் வாக்கு முன்னிலை
எனவே இப்படியாக வாக்கு வித்தியாசங்கள் மிக குறைவாக இருப்பது தேர்தல் முடிவு யாருக்கு சாதகமாக மாறும் என்பதை சொல்ல முடியாத நிலை இருக்கிறது. நிமிடத்திற்கு நிமிடம் முன்னணி நிலவரம் மாறி வருவதால் வெல்லப்போவது பாஜக கூட்டணியா அல்லது ஆர்ஜேடி கூட்டணி என்ற பரபரப்பு காணப்படுகிறது. இது ஒருபுறம் எனில் முழுமுடிவு தெரிய நள்ளிரவு ஆகும் என்று தேர்தல் ஆணையமே கூறியிருக்கிறது. எனவே தேர்தல் முடிவு வெளியாக இரவு வரை காத்திருக்க வேண்டியது அவசியம்