பீகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா காலமானார்
பாட்னா: பீகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ரா (வயது 82) இன்று டெல்லியில் உடல்நலக் குறைவால் காலமானார்.
பேராசிரியராக இருந்து அரசியலுக்கு வந்தவர் ஜெகநாத் மிஸ்ரா. பீகார் மாநிலத்தில் 3 முறை முதல்வராக பதவி வகித்தவர்.
மத்திய அமைச்சரவையிலும் அவர் இடம்பெற்றிருந்தார். காங்கிரஸ் கட்சியின் கடைசி பீகார் முதல்வர் ஜெகநாத் மிஸ்ராதான். காங்கிரஸில் இருந்து வெளியேறி தேசியவாத காங்கிரஸுக்கு சென்ற ஜெகநாத் மிஸ்ரா பின்னர் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார்.
1953 முதல் 1960கள் வரை வினோபாவேவின் பூமிதான இயக்கத்தில் தீவிர பங்களிப்பு செய்தார் ஜெகநாத் மிஸ்ரா. 40-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார்.
2013-ம் ஆண்டு மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தால் குற்றவாளி என தண்டிக்கப்பட்ட 44 பேரில் ஜெகநாத் மிஸ்ராவும் ஒருவர். மற்றொரு மாட்டுத் தீவன வழக்கில் ராஞ்சி நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருந்தது. கடந்த ஜூன் மாதம் மேலும் ஒரு மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் ஜெகநாத் மிஸ்ராவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்ததது.
ஜெகநாத் மிஸ்ராவின் மகன், நிதிஷ் மிஸ்ரா பீகார் அமைச்சராக உள்ளார். இதனிடையே உடல்நலக் குறைவால் டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஜெகநாத் மிஸ்ரா காலமானார்.அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.