"பாரத் மாதா கி ஜே" என்று உச்சரித்தவர்களுக்கு.. 15 வருடம் தொந்தரவு தந்தார்கள்.. பீகாரில் மோடி பேச்சு!
பீகாரில் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
பாட்னா: "பீகார் மக்கள் முடிவு பண்ணிட்டாங்க. ரொம்பத் தெளிவா இருக்காங்க. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான் வாக்களிப்போம் என உறுதியுடன் உள்ளனர்" என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பீகாரில் மொத்தம் 3 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே முதல் கட்டம் முடிந்த நிலையில், 2வது கட்டத் தேர்தல் இன்று நடந்தது. இந்த நிலையில் பீகாருக்கு 4வது முறையாக இன்று பிரச்சாரம் செய்ய வந்தார் பிரதமர் மோடி.
இன்று நடந்த தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு நரேந்திர மோடி பேசுகையில், பீகார் தெளிவான சேதியைத் தெரிவித்துள்ளது. ஆரம்ப கட்ட தகவலின்படி மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த முடிவு செய்து விட்டனர்.
பீகாரில் காட்டு தர்பாரை அமல்படுத்த விரும்புவோரும், அவர்களின் கூட்டாளிகளுக்கும் ஆட்சி நடத்த அருகதை உள்ளதா.. ஆட்சி நடத்தத்தான் தெரியுமா.. இந்த புனிதமான பூமியில், சதி கடவுளை வணங்கும் இந்த பூமியில், பாரத் மாதா கி ஜெய் என்று முழங்க மறுத்தால் அவர்கள் எப்படி தேசத்திற்காக முழங்குவார்கள்.?
ஒரு குரூப் சொல்கிறது.. பாரத் மாதா கி ஜெய் என்று சொல்லாதீர்கள் என. இன்னொருவர் அதைத் தலைவலி என்று சொல்கிறார். இப்போது இருவரும் இணைந்து மக்களிடம் வாக்கு கேட்க வருகிறார்கள்... அவர்கள் உங்களை ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல விட மாட்டார்கள்.. இவர்களை பீகார் மக்கள் நிராகரித்து விட்டனர்.
சிலருக்கு மோடி எப்படி தேர்தலில் வெல்கிறார் என்ற கவலை உள்ளது.. மோடி ஏன் வெல்கிறார்.. அவர் தான் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கிறார்... அதனால்தான் அவரை மக்கள் வெல்ல வைக்கிறார்கள். மக்கள் அவரைத்தான் ஆசிர்வதிக்கிறார்கள்.. இந்த எளிய மகன் எளிய மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு விட்டான்" என்று பேசினார் மோடி.