பீகார் சட்டசபை தேர்தல்: 94 தொகுதிகளில் நாளை 2-ம் கட்ட வாக்குப் பதிவு- 1463 வேட்பாளர்கள்!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் 2-ம் கட்டமாக 94 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யபட்டுள்ளன.
கொரோனா பரவல் உள்ள நிலையில் பீகார் மாநில சட்டசபை தேர்தலை நடத்துவது மிக சவாலான பணி. கடந்த காலங்களைப் போல இல்லாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடனும் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக அக்டோபர் 28-ல் 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் வன்முறை சம்பவங்கள் அதிகம் இல்லாமல் அமைதியாக வாக்குப் பதிவு நடந்தது.
நாளை 2ம் கட்ட தேர்தல்
இதனை தொடர்ந்து நாளை 94 தொகுதிகளில் 2-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 2-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 2.85 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 1,50,33,034 பேர் ஆண் வாக்காளர்கள்;1,35,16,271 பேர் பெண் வாக்காளர்கள்.
மொத்தம் 1463 வேட்பாளர்கள்
தேர்தல் களத்தில் 1463 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் 1316 பேர் ஆண்கள்; 146 பேர் பெண்கள். 2-ம் கட்ட வாக்குப் பதிவுக்காக 41,362 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2-ம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக மகராஜ்கஞ்ச் தொகுதியில் 27 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். தாராலு தொகுதியில் 4 பேர் மட்டுமே வேட்பாளர்கள்.
எத்தனை இடங்களில் போட்டி?
2-ம் கட்ட தேர்தலில் பாஜக 46; ஜேடியூ 43 இடங்களில் போட்டியிடுகின்றன. ஆர்ஜேடி 56; காங்கிரஸ் 24 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. சிபிஎம்எல் 6, சிபிஎம், சிபிஐ தலா 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
அனல் பறந்த பிரசாரம்
பிரதமர் மோடி கடந்த 2 நாட்களில் மட்டும் 7 கூட்டங்களில் பிரசாரம் செய்தார். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், ஸ்மிருதி இரானி, கிரிராஜ்சிங் உள்ளிட்டோரும் தீவிர பிரசாரம் செய்தனர். நாளை 2-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. எதிர்க்கட்சிகளில் ஆர்ஜேடி தேஜஸ்வி யாதவ், எல்ஜேபி சிராக் பாஸ்வான் ஆகியோரும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.